பி-2 பாம்பர்ஸ் விமானங்கள் புறப்பட்டன? ஈரானின் நிலவறைகளை அழிக்கத் திட்டமா?
அமெரிக்க விமானப் படைக்குச் சொந்தமான பி -2 பாம்பர்ஸ் விமானங்கள் ஈரானின் அணுசக்தி உற்பத்தி நிலவறைகளை அழிக்கப் புறப்பட்டிருக்கலாம்.
ஏனெனில், இந்தியப் பெருங்கடலில் உள்ள டீகோ கார்சியா என்ற தீவில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த பி -2 பாம்பர்ஸ் விமானம், தற்போது அந்த இடத்தில் இல்லை என சமீபத்திய செயற்கைக்கோள் புகைப்படத்தின் மூலம் பிபிசி தெரிவித்துள்ளது.
ஈரானில் பூமிக்கு அடியில் அணுசக்தி செறிவூட்டல் நடத்தப்படுவதாகவும் அணு ஆயுத உற்பத்திக்கு அவை பின்புலமாக இருப்பதாகவும் அமெரிக்கா தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது.
ஈரானின் நிலவறைகளையும், பதுங்குக் குழி தளவாடங்களையும் ஜிபியு -57 ஏ/பி என்ற குண்டு மூலம் அழிக்க முடியும். ஒரு குண்டு 13,000 கிலோ எடையுடையது. பூமிக்கடியில் நீண்ட தூரத்துக்கு செங்குத்தாக நுழைந்து தாக்கக்கூடியது.
இந்த குண்டுகளை சுமந்து செல்லும் விமானமே பி -2 பாம்பர்ஸ். இவை நார்த்ரோப் பி-2 ஸ்பிரிட் எனவும் அழைக்கப்படுகின்றன. ஏனெனில் நார்த்ரோப் என்ற விமானப் படை நிறுவனமே இதனைத் தயாரித்தது.
இந்த விமானங்கள் தொடர்ச்சியாக 40 மணிநேரம் வானில் பறக்கக்கூடிய திறன் கொண்டது. இதனால், டியோ கார்சியாவில் இருந்து அல்ல, அமெரிக்காவில் இருந்து கூட நேரடியாக ஈரான் மீது தாக்குதல் நடத்த முடியும்.
2001ஆம் ஆண்டு செப்டம்பர் 11ஆம் தேதி அமெரிக்காவின் இரட்டை கோபுரம் மீது ஆப்கானிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், டீகோ கார்சியாவில் இருந்து ஆப்கானிஸ்தான் மீது பி -2 பாம்பர்ஸ் மூலமே அமெரிக்கா தாக்குதல் நடத்தியது.
ஒருமுறை எரிபொருள் நிரப்பினால், 11,000 கி.மீ. வரை பறக்க இயலும். நடுவானிலும் இந்த விமானத்தில் எரிபொருள் நிரப்ப இயலும்; அவ்வாறு நடுவானில் நிரப்பப்படும் எரிபொருள் கொண்டு 19,000 கி.மீ. வரை பறக்கும் திறன் உடையது.
இத்தகைய அதிசக்தி வாய்ந்த குண்டுகளைச் சுமந்து செல்லும் பி -2 பாம்பர்ஸ் விமானம், கடந்த மார்ச் மாதம் டீகோ கார்சியா பகுதியில் இருந்ததாகவும், ஆனால், தற்போதைய செயற்கைக்கோள் படத்தில் அந்த விமானம் அங்கு இல்லை எனவும் பிபிசி அறிவித்துள்ளது போர்ப் பதற்றத்தை அதிகரித்துள்ளது.
ஈரான் - இஸ்ரேல் இடையே போர் தொடங்கிவிட்டதாக ஈரான் தலைமை மதகுரு அயத்துல்லா அலி கமேனி அறிவித்திருந்தார். பயங்கரவாதி சியோனிஸ்ட் ஆட்சிக்கு நாங்கள் நிச்சயம் பதிலடி கொடுப்போம் என்றும் சியோனிஸ்ட்டுக்கு கருணை காட்ட மாட்டோம் எனவும் பதிவிட்டிருந்தார்.
இதோடுமட்டுமின்றி ஈரானின் செய்தித் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்று, இன்று இரவு மிகப்பெரிய ஆச்சரியம் காத்திருக்கிறது. நூற்றாண்டுகளுக்கு இதனை உலகம் நினைவில்கொள்ளும் எனவும் குறிப்பிட்டுள்ளது.
மறுபுறம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பும் ஈரானுக்கு எச்சரிக்கை விடுத்து வருகிறார். கமேனி பதுங்கியிருக்கும் இடம் தங்களுக்குத் தெரிய வந்திருப்பதாகவும், நிபந்தனையின்றி சரணடைய வேண்டும் என்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஈரானுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தார்.
இரு நாடுகளின் தலைவர்களும் மாறி மாறி சமூக வலைதளப் பக்கத்தில் பதிலளித்து வருவது, போர் சூழலைத் தீவிரப்படுத்தியுள்ளது.
இதையும் படிக்க | இஸ்ரேல் - ஈரான் போர் உங்கள் பாக்கெட்டையும் காலி செய்யும்! எவ்வாறு?