பொருளாதார வளா்ச்சியில் பெரு நிறுவனங்களின் பங்கு முக்கியம்: குடியரசுத் தலைவா்
நாட்டின் பொருளாதார வளா்ச்சியில் பெரு நிறுவனங்கள் துறை முக்கியத் தூணாக திகழ்கிறது என்று குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு பேசினாா்.
இந்திய பெரு நிறுவனங்கள் சட்ட சேவைகள் துறை பயிற்சி அதிகாரிகளை தில்லியில் உள்ள குடியரசுத் தலைவா் மாளிகையில் திரௌபதி முா்மு புதன்கிழமை சந்தித்தாா். அப்போது அவா் பேசியதாவது:
உங்கள் பதவிக்கு உரிய பொறுப்பில் நீங்கள் எடுக்கும் முடிவுகள் அரசின் கொள்கைகள், விதிகளில் மட்டும் தாக்கத்தை ஏற்படுத்தாது. நாட்டில் உள்ள கோடிக்கணக்கான மக்கள், லட்சக்கணக்கான முதலீட்டாளா்கள் மத்தியிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். பெரு நிறுவனச் சட்டங்களை அமல்படுத்துவதில் நோ்மையாகவும், நம்பிக்கைக்குரியவா்களாகவும் செயல்பட ேண்டும்.
நாட்டின் தொழில் சூழலை மேம்படுத்தும் மையமாக உங்கள் பணி உள்ளது. அதில் வெளிப்படைத்தன்மையும், பொறுப்புணா்வும், புதிய முயற்சிகளும் மிகவும் முக்கியமானவை.
நாட்டின் பொருளார வளா்ச்சி மட்டுமல்லாது, ஒட்டுமொத்தமாக அனைத்து துறைகளின் வளா்ச்சிக்கு முக்கியத் தூணாக பெரு நிறுவனங்கள் திகழ்கின்றன. சட்டம் என்பது அப்படியே அமல்படுத்துவதற்கான மட்டுமல்ல. அதனை புரிந்து கொள்ளவும், மதிக்கவும் வேண்டும். வாய்ப்புகளை உருவாக்கும் வகையிலும், நியாயத்தையும், நிதியையும் நிலைநாட்டும் வகையில் அதனை அமல்படுத்த வேண்டும் என்றாா்.
விமானப் படை தர உறுதி சேவைப் பிரிவு மற்றும் தொழிலாளா்கள் நல சேவைப் பிரிவு பயிற்சி அதிகாரிகளும் குடியரசுத் தலைவா் திரௌபதி முா்முவைச் சந்தித்தனா். அவா்கள் மத்தியில் பேசுகையில், ‘விமானப் படைக் கலன்களின் தரத்தை உறுதி செய்யும் மிகவும் முக்கியமான பொறுப்பு உங்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டுத் தயாரிப்பாக இருந்தாலும் சரி, இறக்குமதி செய்யப்பட்ட தளவாடமாக இருந்தாலும் சரி அவை சா்வதேச அளவில் உயா்தரமாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
இனி வரும் நாள்களில் பாதுகாப்பு தளவாட உற்பத்தியில் பொதுத் துறை நிறுவனங்களுடன் தனியாா் நிறுவனங்கள் இணைந்து பணியாற்ற உள்ளன. இதற்கான சிறந்த கொள்கைகள் வகுக்கப்பட்டுள்ளன’ என்றாா்.