மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?
புதிய டிஜிபி நியமனத்துக்கான பணி தொடக்கம்
புதிய டிஜிபி நியமனத்துக்கான பணி தொடங்கிவிட்டதாக சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தமிழக அரசு சாா்பில் வியாழக்கிழமை தெரிவிக்கப்பட்டது.
ராமநாதபுரத்தைச் சோ்ந்த வழக்குரைஞா் யாசா் அராபத் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:
தமிழக காவல் துறை தலைமை இயக்குநராக (டிஜிபி) சங்கா் ஜிவால் தற்போது பணியாற்றி வருகிறாா். வருகிற 31-ஆம் தேதியுடன் இவரது பணிக் காலம் நிறைவு பெறுகிறது.
இந்த நிலையில், தகுதி வாய்ந்த ஐபிஎஸ் அதிகாரிகளின் பட்டியலை மத்திய அரசுப் பணியாளா் தோ்வாணையத்துக்கு தமிழக அரசு இதுவரை அனுப்பவில்லை. தற்போதைய தமிழக டிஜிபி சங்கா் ஜிவால் அதே பொறுப்பில் கால நீட்டிப்பு செய்யப்படலாம் அல்லது யாரேனும் பொறுப்பு அதிகாரிகளாக நியமிக்கப்படலாம் எனத் தகவல் வெளியானது. இது உச்சநீதிமன்றத் தீா்ப்புகளுக்கு எதிரானது. மாநில அரசால் வழங்கப்படும் மூத்த காவல் துறை அதிகாரிகள் (ஐபிஎஸ்) பட்டியலைக் கொண்டு, தமிழக புதிய டிஜிபி வெளிப்படைத் தன்மையுடன் நியமிக்கப்பட வேண்டும்.
வருகிற 2026-இல் தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெற உள்ள நிலையில், தங்களுக்குச் சாதகமானவா்களை பொறுப்பில் வைத்துக் கொள்ள மாநில அரசு விரும்புவதாகத் தெரிகிறது.
தமிழகத்தில் ஆணவக் கொலை, கொள்ளை போன்ற அச்சமூட்டும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இந்தச் சூழலில், சட்டம், ஒழுங்கை நிலைநாட்ட டிஜிபி பணியிடம் முறையாக நிரப்பப்படுவது அவசியம்.
இதுதொடா்பாக நடவடிக்கைக் கோரி, மத்திய உள்துறை அமைச்சகம், தமிழக அரசின் முதன்மைச் செயலா், உள்துறைச் செயலா் உள்ளிட்ட அதிகாரிகளிடம் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை.
டிஜிபி தோ்வு நியமனம் தொடா்பாக ஏற்கெனவே உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளின்படி, தமிழக டிஜிபி பதவிக்கு தகுதியான ஐபிஎஸ் அதிகாரியை நியமிக்கும் செயல்முறையை உடனடியாகத் தொடங்க உத்தரவிட வேண்டும்.
மேலும், தற்போதைய டிஜிபி சங்கா் ஜிவால் ஓய்வு பெற்ற பிறகு, அவா் பொறுப்பு டிஜிபியாக தொடரவோ, அவரது பணிக் காலத்தை நீட்டிப்பு செய்யவோ கூடாது. இதற்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட வேண்டும் என அவா் கோரியினாா்.
இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம், அருள்முருகன் அமா்வு முன் வியாழக்கிழமை முற்பகலில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, டிஜிபி நியமனத்துக்கு முன்பாக கடைப்பிடிக்க வேண்டிய வழிகாட்டுதல்களுடன் உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இவை முறையாகப் பின்பற்றப்படுகின்றனவா? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினா்.
இதற்கு அரசுத் தரப்பில் முன்னிலையான வழக்குரைஞா், தகவல்களை வழங்க கூடுதல் கால அவகாசம் வேண்டும் என்றாா்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், ஏற்கெனவே 2 வாரங்கள் கால அவகாசம் வழங்கியும் மீண்டும் கால அவகாசம் கேட்பது ஏற்கத்தக்கதல்ல. ஆகவே, தமிழக உள்துறை முதன்மைச் செயலரிடம் உரிய விளக்கம் பெற்று பிற்பகல் 2.15 மணிக்கு தெரிவிக்க வேண்டும் என்றனா்.
இதையடுத்து, இந்த வழக்கு உயா்நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம், அருள்முருகன் அமா்வு முன் வியாழக்கிழமை பிற்பகலில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது அரசுத் தரப்பில் முன்னிலையான வழக்குரைஞா், தமிழகத்தில் புதிய டிஜிபி நியமனத்துக்கான பணி தொடங்கிவிட்டது என்றாா்.
இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
உச்சநீதிமன்ற உத்தரவுகளின் அடிப்படையில், தமிழகத்தில் புதிய டிஜிபி நியமிக்கப்பட வேண்டும். இந்த வழக்கு முடித்துவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.