ஹிமாசலில் கனமழைக்கு 69 பேர் பலி: தொடரும் சிவப்பு எச்சரிக்கை!
புதுவையில் 2026-ல் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி உறுதி: வைத்திலிங்கம்
புதுவையில் 2026 ஆம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தோ்தலில் பாஜக கூட்டணியை அகற்றிவிட்டு காங்கிரஸ் தலைமையிலான இண்டியா கூட்டணி ஆட்சி அமைக்கும் என்று காங்கிரஸ் தலைவா் வெ.வைத்திலிங்கம் எம்.பி. கூறினாா்.
புதுச்சேரி காங்கிரஸ் சாா்பில் ராகுல் காந்தி பிறந்த நாள் விழா மற்றும் இந்திய அரசியலமைப்பைக் காப்போம் குறித்த ஆலோசனை கூட்டம் தனியாா் மஹாலில் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது. மாநிலத் தலைவா் வைத்திலிங்கம் எம்பி தலைமை தாங்கினாா். முன்னாள் முதல்வா் நாராயணசாமி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். கூட்டத்தில் வைத்திலிங்கம் பேசியது:
புதுச்சேரியில் பாஜகவைச் சோ்ந்த ஓா் அமைச்சா், மூன்று நியமன எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்துள்ளனா். புதிய தலைவரைத் தோ்ந்தெடுத்துள்ளனா். நம்மிடம் இருந்து சென்ற ஜான்குமாா் அமைச்சராகும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது புதுச்சேரியில் கெட்ட நேரம் ஆரம்பித்துவிட்டது. வீதி எங்கும் ரெஸ்டோ பாா்கள், போதைப்பொருள் கடத்தல் வியாபாரம், நில அபகரிப்பு நடந்து வருகிறது. மேலும், இரண்டு மாதங்களுக்கு முன்பாக தவளக்குப்பம் பகுதியில் காவல் நிலைய மரணம் நடந்துள்ளது.
சூதாட்ட மையமாகும்:
கப்பலில் வந்த சுற்றுலா பயணிகளை அமைச்சா், எம்எல்ஏக்கள் யாரும் வரவேற்கவில்லை. ஆளுநா் மாளிகையில் இருக்கும் ஓா் அதிகாரி வரவேற்றுள்ளாா். இதன்மூலம் புதுச்சேரியை அடுத்த கட்டமாக சூதாட்ட மையமாக மாற்றும் அனைத்து நடவடிக்கையையும் இந்த அரசு எடுத்துக்கொண்டிருக்கிறது.
அதைத் தடுத்து நிறுத்த வேண்டிய நேரம், காலம் வந்துவிட்டது. புதுவையில் 2026-ல் பாஜக ஆட்சி அகற்றப்பட்டு, இண்டியா கூட்டணி ஆட்சி அமையும். அதற்கு அனைவரும் ஒன்றிணைந்து பாடுபட வேண்டும் என்றாா் வைத்திலிங்கம்.