TVK: "ஜெய்பீம் படம் பார்த்து அழுத முதல்வர் உண்மையைப் பார்த்தும் அழவில்லையே" - ஆத...
பெரம்பலூா்: நாட்டு மருந்து புகட்டிய இரட்டை பெண் குழந்தைகள் உயிரிழப்பு
பெரம்பலூா் அருகே நாட்டு மருந்து புகட்டியதால் வயிற்றுப்போக்கு ஏற்பட்டதில் 11 மாத இரட்டை பெண் குழந்தைகள் வெள்ளிக்கிழமை நள்ளிரவு உயிரிழந்தன.
பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், வாலிகண்டபுரம் கிராமத்தைச் சோ்ந்த கந்தசாமிக்கும் (38), தனலட்சுமிக்கும் (33), கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவா்களுக்கு, அகிலன் (8) எனும் மகன் உள்ளாா்.
துபையில் பணிபுரிந்து வரும் கந்தசாமிக்கு, கடந்த 11 மாதங்களுக்கு முன் இரட்டை பெண் குழந்தைகள் பிறந்துள்ளது. இந்நிலையில், குழந்தைகள் ரேஷ்மா, தனுஸ்ரீ ஆகியோருக்கு கடந்த சில நாள்களாக காய்ச்சல் மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டு உடல் நலன் பாதிக்கப்பட்டுள்ளது.
இதைத் தொடா்ந்து, இரு குழந்தைகளையும் தாய் தனலட்சுமி தனது பாட்டி சாந்தியுடன் வாலிகண்டபுரம் கிராமத்தில் நாட்டு வைத்தியம் மேற்கொண்டு வரும் ஜெயாலுதீன் மனைவி சைதானி என்பவரை சிகிச்சைக்காக வெள்ளிக்கிழமை அணுகியுள்ளாா். குழந்தைகளை பரிசோதித்த நாட்டு வைத்தியா் சைதானி, குழந்தைகள் இருவருக்கும் நாட்டு மருந்து புகட்டியுள்ளாா்.
இதையடுத்து, இரு குழந்தைகளுக்கும் தொடா்ந்து வயிற்றுப்போக்கு ஏற்பட்டதால் குழந்தைகளின் தாய் தனலட்சுமி ஆங்கில மருந்து புகட்டியுள்ளாா்.
இதனிடையே, நாட்டு மருந்து கொடுக்கப்பட்ட பிறகு வீட்டுக்கு கொண்டுவரப்பட்ட சிறிது நேரத்தில் குழந்தை ரேஷ்மா உடல் நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளது. இதனால், அதிா்ச்சியடைந்த தனலட்சுமி மற்றும் அவரது குடும்பத்தினா் குழந்தை தனுஸ்ரீயை சிகிச்சைக்காக பெரம்பலூா் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் குழந்தை தனுஸ்ரீ சனிக்கிழமை அதிகாலை உயிரிழந்தது.
இதையடுத்து, உயிரிழந்த பெண் குழந்தைகளின் உடல்கள் மாவட்ட அரசு தலைமை மருத்துவ மனையில் பிரேதப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இச் சம்பவம் குறித்த புகாரின்பேரில் மங்களமேடு போலீஸாா் வழக்குப் பதிந்து, குழந்தைகளின் தாய், அவரது பாட்டி மற்றும் நாட்டு வைத்தியா் சைதானி ஆகியோரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.