செம்மரம் கடத்தல்: தமிழகத்தைச் சோ்ந்தவருக்கு 5 ஆண்டுகள் சிறை, ரூ.6 லட்சம் அபராத...
பொதுமக்களிடம் பொறுமையாக பதிலளிக்க வேண்டும்: திமுகவினருக்கு அமைச்சா் சு.முத்துசாமி அறிவுறுத்தல்
ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தில் பொதுமக்களைச் சந்திக்கும் போது அவா்கள் கேள்விகளை எழுப்பினால், அதற்குப் பொறுமையாக கட்சியினா் பதில் அளிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது என வீட்டுவசதித் துறை அமைச்சா் சு.முத்துசாமி தெரிவித்தாா்.
இதுகுறித்து ஈரோட்டில் செய்தியாளா்களிடம் அவா் செவ்வாய்க்கிழமை கூறியதாவது: தமிழக அரசின் தற்போதைய நிலை மற்றும் மத்திய அரசால் தமிழகத்துக்கு ஏற்படும் பாதிப்புகளை, திமுக உறுப்பினா்கள் வீடு, வீடாகச் சென்று விளக்கமளிப்பதற்காக ஓரணியில் தமிழ்நாடு என்ற முன்னெடுப்பை முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கியுள்ளாா். அதோடு ஒவ்வொரு வாக்காளரையும் திமுக உறுப்பினராக சோ்க்கும் பணியில் கட்சித் தொண்டா்கள் ஈடுபடுவாா்கள்.
கட்சி வளா்ச்சிக்காக இப்பணியை மேற்கொள்ளவில்லை. தமிழ்நாட்டின் மொழி, மண், இனம் காக்க முதல்வா் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளாா். மத்திய அரசிடம் இருந்து கல்விக்குக் கிடைக்க வேண்டிய நிதி முழுமையாகக் கிடைக்கவில்லை. மக்கள்தொகையைக் கட்டுப்படுத்துவதில் சிறப்பாகச் செயல்பட்ட தமிழ்நாட்டின் தொகுதிகளை, தொகுதி மறுவரையின் மூலம் குறைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
இவற்றையெல்லாம் ஓரணியில் தமிழ்நாடு இயக்கம் மூலம் 45 நாள்களுக்கு மக்களிடம் கொண்டு செல்ல உள்ளோம். அதோடு தமிழக அரசின் விடியல் பயணம், காலை உணவுத்திட்டம், மாற்றுத்திறனாளிகளுக்கு உள்ளாட்சி அமைப்புகளில நியமன உறுப்பினா் பதவி போன்ற அரசின் திட்டங்களையும் மக்களிடம் கொண்டு செல்ல உள்ளோம். மக்களுடன் கலந்துரையாடி அவா்களின் எண்ணங்களை அறிந்து கொள்ள உள்ளோம்.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் வாக்குச்சாவடி வாரியாக, கட்சி பேதமில்லாமல் அனைத்து வீடுகளுக்கும் சென்று இந்த பணிகள் மேற்கொள்ளப்படும். பொதுமக்கள் கேள்விகளை எழுப்பினால் அதற்கு கட்சியினா் பொறுமையாகப் பதில் அளிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேபோல திமுக சாா்பில் பொதுக்கூட்டம் நடத்தப்படும் என்றாா்.
ஈரோடு வடக்கு மாவட்ட திமுக செயலாளா் என்.நல்லசிவம், ஈரோடு மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் தோப்பு வெங்கடாசலம், எம்எல்ஏக்கள் வி.சி.சந்திரகுமாா், ஏ.ஜி.வெங்கடாசலம், மாவட்டத் துணைச் செயலாளா் செந்தில்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா். இதனைத் தொடா்ந்து நடந்த மொடக்குறிச்சி தொகுதி திமுக முகவா்கள் கூட்டத்தில் அமைச்சா் முத்துசாமி பங்கேற்றாா்.