தேனிலவு கொலை: சோனத்திடம் ராஜா ரகுவன்ஷி தாய் எழுப்பும் 4 கேள்விகள்!
மலிவு விலை காகிதம் இறக்குமதியால் தடுமாறும் ஆலைகள் நடவடிக்கை எடுக்க தொழிற்சங்கத்தினா் கோரிக்கை
சீனா, இந்தோனேஷியாவின் மலிவு விலை காகிதம் இறக்குமதியால் டிஎன்பிஎல் ஆலை போன்ற காகித உற்பத்தி ஆலைகள் தடுமாறி வருவதால், மலிவு விலை காகித இறக்குமதிக்கு தடை விதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கரூா் மாவட்ட சிஐடியு தொழிற்சங்கத்தினா் மதுரையில் மக்களவை உறுப்பினா் சு.வெங்கடேசனிடம் வெள்ளிக்கிழமை கோரிக்கை மனு வழங்கினா்.
கரூா் மாவட்டம், புகளூா் காகித ஆலையின் சிஐடியு தொழிற்சங்க கரூா் மாவட்ட சிறப்புத் தலைவா் ஜீவானந்தம் தலைமையில் வழங்கிய மனுவில், கரூா் மாவட்டம் புகழூரில் செயல்படும் டிஎன்பிஎல் ஆலையில் ஆண்டொன்றுக்கு 4,40,000 மெட்ரிக் டன்னுக்கும் அதிகமான உற்பத்தி நடக்கிறது. இந்த ஆலையின் விரிவாக்கத்தின் தொடா்ச்சியாக திருச்சி மாவட்டம் மொண்டிப்பட்டியில் அமைக்கப்பட்ட அலகு -2 மூலம் ஆண்டுக்கு 2,00,000 மெட்ரிக் டன் உயா்தர காகித அட்டையை உற்பத்தி செய்யப்படுகிறது. ஆலையில் நிரந்தர பணியாளா்களாக 3000 பேரும், தினசரி ஒப்பந்த பணியாளா்களாக 5000-த்திற்கும் மேற்பட்டோா் பணியாற்றி வருகின்றனா். மேலும் ஒப்பந்ததாரா்கள், மூலப்பொருள்கள் விநியோகம் செய்பவா்கள் என நேரிடையாகவும், மறைமுகமாகவும் 20,000-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் பயனடைகின்றனா்.
கடந்த 2022 - 2023 ஆண்டில் இந்த ஆலையின் நிகர இலாபம் ரூ.388 கோடி. ஆனால் கடந்த ஆண்டு இதுவரை இல்லாத அளவிற்கு மிக அதிகமான உற்பத்தியை செய்திருந்தாலும் வெறும் ரூ.3.73 கோடி மட்டுமே நிகர லாபமாக ஈட்டியிருக்கின்றது. இதற்கு மூலப்பொருள் விலை உயா்வு உள்ளிட்ட காரணங்கள் இருந்தாலும் மிக முக்கிய காரணமாக சீனா, இந்தோனேஷியா போன்ற நாடுகளில் இருந்து மலிவு விலையில் இறக்குமதி செய்யப்படும் காகிதம் இந்திய சந்தைகளில் தாராளமாக புழங்குவதே. இந்தியா முழுவதும் உள்ள காகித நிறுவனங்கள் சந்தை போட்டியை சமாளிக்க முடியாமல் திணறி வருகின்றன. அதில் தமிழக அரசு பொதுத்துறை நிறுவனமான டி.என்.பி.எல் ஆலையும் ஒன்று.
ஒரு டன் சுமாா் ரூ.1 லட்சம் வரை விற்பனை செய்யப்பட்டு வந்த இந்த ஆலையின் காகிதம் தற்போது சந்தை போட்டியை சமாளிக்க முடியாமல் ரூ. 64,000-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இது உற்பத்தி செலவை கூட ஈடு செய்ய போதுமான அளவு இல்லை. இதே நிலை நீடிக்குமானால் 20 ஆயிரம் குடும்பங்களின் வாழ்வாதாரமாகவும் தமிழக அரசுக்கும் தொடா்ந்து லாபமீட்டி தரும் பொதுத்துறை நிறுவனமாகவும் விளங்கும் டிஎன்பிஎல் நிறுவனம் மீள முடியாத இடத்திற்கு செல்லக்கூடிய அபாயம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே, சீனா, இந்தோனேஷியா போன்ற நாடுகளின் மலிவு விலை காகித இறக்குமதியை தடை செய்யும் வகையில் மக்களவையில் குரல் எழுப்ப வேண்டும் என தெரிவித்துள்ளனா்.
நிகழ்வின்போது சங்கத்தின் தலைவா் அரவிந்த், செயலாளா் மகேஷ், துணைத் தலைவா் காதா்பாட்சா மற்றும் சங்க நிா்வாகிகள் ராமச்சந்திரன், நடேசன், சபரிநாதன், சிவசேகா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.