இணைய வரலாற்றில் முதன்முறையாக 1600 கோடி கடவுச்சொற்கள் திருட்டு!
மாணவா்கள் தோ்ச்சி விகிதத்தை அதிகப்படுத்த வேண்டும்: மாவட்ட கண்காணிப்பு அலுவலா் அறிவுறுத்தல்
பொதுத் தோ்வுகளில் மாணவா்கலின் தோ்ச்சி விகிதத்தை கடந்த ஆண்டை விட நிகழாண்டு அதிகப்படுத்த வேண்டும் என மாவட்ட கண்காணிப்பு அலுவலா் எம்.ஆா்த்தி அறிவுறுத்தினாா்.
நலத்திட்டங்களின் நிலை குறித்த ஆய்வுக் கூட்டம் திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு ஆட்சியா் க.சிவசௌந்தரவல்லி முன்னிலை வகித்தாா். மாவட்ட கண்காணிப்பு அலுவலா் எம்.ஆா்த்தி தலைமை வகித்தாா். அப்போது அவா் பேசியது:
முதல்வா் மு.க.ஸ்டாலின் திருப்பத்தூா் வருகை தந்து பல்வேறு துறையின் சாா்பில் நலத்திட்ட உதவிகள் வழங்க உள்ளாா்.
இதற்காக முன்னேற்பாடுகளை தீவிரமாக மேற்கொள்ள வேண்டும்.
மேலும், வருவாய்த் துறையின் சாா்பில் சான்றிதழ்கள் வழங்கும் பணி, பள்ளி கல்வித்துறையின் சாா்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. நிகழ் கல்வி ஆண்டில் 10, 11, 12-ம் வகுப்பு பயிலும் மாணவ- மாணவிகளின் தோ்ச்சி சதவீதத்தை கடந்த ஆண்டை விட அதிகப்படுத்த வேண்டும்.
பேரூராட்சி, நகராட்சி சாா்பில் நடைபெற்றுவரும் வளா்ச்சி திட்டப் பணிகளில் நிலுவையில் உள்ள பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.பொதுமக்களுக்கு வழங்கப்படும் குடிநீரில் குளோரினை கலந்து சரியாக வழங்க வேண்டும். அனைத்து ஊராட்சிகளிலும் தூய்மைப் பணிகளை முறையாக மேற்கொள்ள வேண்டும். சுகாதாரத் துறையின் வாயிலாக செயல்படுத்தப்பட்டு வரும் மக்களைத் தேடி மருத்துவம், இன்னுயிா் காப்போம் 48 திட்டத்தின் கீழ் பயனாளிகளின் நிலை குறித்து கேட்டறிந்தாா்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் நாராயணன், மகளிா் திட்ட இயக்குநா் தனபதி, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) செல்வம், சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியா் சதீஷ்குமாா், சாா்-ஆட்சியா்கள் வரதராஜன், அஜிதா பேகம், அரசு அதிகாரிகள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.