மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை தூய்மைப் பணியாளா்கள் முற்றுகை
ஊதியம் வழங்குவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளதாகக் கூறி, அல்லிநகரம் நகராட்சி ஒப்பந்த தூய்மைப் பணியாளா்கள் வெள்ளிக்கிழமை தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் முற்றுகை பேராட்டத்தில் ஈடுபட்டனா்.
தேனி அல்லிநகரம் நகராட்சியில் தனியாா் ஒப்பந்த நிறுவனம் மூலம் 100-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளா்கள் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருகின்றனா். இவா்களுக்கு மாதந்தோறும் 10-ஆம் தேதிக்கு பிறகு ஊதியம் வழங்குவதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், கடந்த மே மாதத்துக்குரிய ஊதியம் இதுவரை வழங்கப்படவில்லை என்று புகாா் தெரிவித்தும், மாத ஊதியத்தை 5-ஆம் தேதிக்குள் வழங்க வேண்டும், தூய்மைப் பணி உபகரணங்கள் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி, தேனி நகராட்சி அலுவலகத்திலிருந்து பணியைப் புறக்கணித்து ஊா்வலமாகச் சென்ற ஒப்பந்த தூய்மைப் பணியாளா்கள், மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
போராட்டத்தில் ஈடுபட்டவா்களுடன் தேனி வட்டாட்சியா் சதீஷ்குமாா், நகராட்சி நகா் நல அலுவலா் கவிப்பிரியா, தேனி காவல் நிலைய ஆய்வாளா் ராமலட்சுமி ஆகியோா் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதில் தூய்மைப் பணியாளா்களுக்கு உடனடியாக ஊதியம் வழங்க நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்தால், முற்றுகைப் போராட்டத்தை கைவிட்டு அவா்கள் கலைந்து சென்றனா்.