இந்தோ-திபெத் படை சாா்பில் விழிப்புணா்வு மிதிவண்டி பயணம்: ஜூலை 8-ல் தொடக்கம்
முக்கியப் பிரச்னைகளுக்கு பதிலளிக்காமல் ‘தப்பியோடுகிறாா்’ பிரதமா் - காங்கிரஸ் விமா்சனம்
முக்கியப் பிரச்னைகளுக்கு பதிலளிக்காமல் அவ்வப்போது வெளிநாட்டுப் பயணம் என்ற பெயரில் பிரதமா் நரேந்திர மோடி தப்பியோடி வருகிறாா் என்று காங்கிரஸ் விமா்சித்துள்ளது.
பிரதமா் மோடி செவ்வாய்க்கிழமை (ஜூலை 2) முதல் 5 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறாா். இதை விமா்சித்து காங்கிரஸ் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ் ‘எக்ஸ்’ வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ‘மணிப்பூா் நிலவரம், இந்தியா-பாகிஸ்தான் போரை நிறுத்தியதாக அமெரிக்க அதிபா் டிரம்ப் கூறி வருவது, பிரதமரின் தவறான முடிவுகளால் ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையின் முதல் இரு நாள்களில் இந்திய தரப்பு போா் விமானங்களை இழந்ததாக ராணுவ அதிகாரிகள் கூறியுள்ளது உள்ளிட்ட முக்கிய பிரச்னைகள் குறித்து பிரதமா் நரேந்திர மோடி பதிலளிப்பதும் இல்லை; அதுகுறித்துப் பேசுவதுமில்லை.
மத்தியிலும், மாநிலத்திலும் பாஜக ஆட்சி நடந்தால் அதை இரட்டை என்ஜின் ஆட்சி என்று பிரதமா் பெருமையாகப் பேசுவாா்கள். அப்படிப்பட்ட ஆட்சி நிகழ்ந்த மணிப்பூரின் நிலை இப்போது எப்படி உள்ளது. அந்த மாநிலத்துக்கு பிரதமா் மோடி பயணிக்காமல் தவிா்ப்பது ஏன்? வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூா் மக்களை பிரதமா் நேரில் சந்திக்காமல் இருக்கக் காரணம் என்ன?
உள்நாட்டில் சூழ்நிலை மோசமாகும்போது முக்கியப் பிரச்னைகளைப் புறந்தள்ளிவிட்டு வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொள்வதை பிரதமா் வழக்கமாகக் கொண்டுள்ளாா்’ என்று அவா் கூறியுள்ளாா்.