``முன்னாள் மனைவிக்கு மாதம் 4 லட்சம் ஜீவனாம்சம் கொடுக்க வேண்டும்'' - ஷமிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமி, தனது முன்னாள் மனைவிக்கு ஜீவனாம்சமாக ரூ.4 லட்சம் வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.
முகமது ஷமிக்கும், ஹசின் ஜஹானுக்கும் கடந்த 2014-ம் ஆண்டு திருமணம் நடந்தது. ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக 2018-ம் ஆண்டு முதல் இருவரும் தனித்தனியாக வாழ்ந்து வருகின்றனர்.

இதனிடையே ஷமி மீது குடும்ப வன்முறை, கொலை முயற்சி, மற்றும் பல பெண்களுடன் தொடர்பு உள்ளதாக ஹசின் புகார் அளித்திருந்தார்.
இதையடுத்து, அவர் மாதாந்திர ஜீவனாம்சமாக ரூ.10 லட்சம் கோரியிருந்தார். அந்த 10 லட்சத்தில் ரூ.7 லட்சம் தனது செலவுகளுக்கும், ரூ.3 லட்சம் மகளின் பராமரிப்பிற்கும் என்று குறிப்பிட்டிருந்தார்.
2023-இல், கீழமை நீதிமன்றம் ஷமிக்கு மாதம் ரூ.1.3 லட்சம் ஜீவனாம்சம் வழங்க உத்தரவிட்டது, ஆனால் இது போதுமானதல்ல எனக் கூறி ஹசின் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார்.

இந்நிலையில் வழக்கை விசாரித்த கொல்கத்தா நீதிமன்றம் ஹசின் ஜஹானுக்கு ரூ.1.5 லட்சம், மகள் ஆய்ராவின் பராமரிப்பிற்கு ரூ.2.5 லட்சம் என மொத்தம் ரூ.4 லட்சம் மாதாந்திர ஜீவனாம்சமாக வழங்க உத்தரவிட்டிருக்கிறது.
இந்தத் தொகையை 2018 முதல் கணக்கிடப்பட்டு, பாக்கி தொகையையும் செலுத்த வேண்டும் என நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது.