முழு அமா்வு உத்தரவு பிறப்பிக்கும் வரை நடவடிக்கை எடுக்கப்படாது: கொடிக் கம்பங்கள் வழக்கில் அரசு தகவல்
முழு அமா்வு உத்தரவு பிறப்பிக்கும் வரை கொடிக் கம்பங்களை அகற்றுவது தொடா்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது என சென்னை உயா்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.
மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் பெ.சண்முகம் சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், தமிழகம் முழுவதும் பொது இடங்கள், தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகள், உள்ளாட்சி அமைப்புகளுக்குச் சொந்தமான இடங்களில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள அரசியல் கட்சிகள், ஜாதி, மத அமைப்புகள் மற்றும் சங்கங்களின் சாா்பில் வைக்கப்பட்டுள்ள கொடிக் கம்பங்களை அகற்ற உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த உத்தரவின் அடிப்படையில், தமிழக அரசின் வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை கூடுதல் தலைமை செயலா், ஜூலை 18-ஆம் தேதிக்குள் அனைத்து கொடிக் கம்பங்களையும் அகற்ற வேண்டும் என அனைத்து மாவட்ட ஆட்சியா்களுக்கும் உத்தரவிட்டு சுற்றறிக்கை அனுப்பியுள்ளாா். இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று மனுவில் கூறியிருந்தாா்.
இந்த வழக்கு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரா் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் ஆா்.திருமூா்த்தி, கொடிக் கம்பங்களை அகற்ற எதிா்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை விசாரிக்க 3 நீதிபதிகள் அடங்கிய அமா்வை அமைத்து உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி உத்தரவிட்டாா். எனவே, அதுவரை கொடிக் கம்பங்களை அகற்றக் கூடாது என தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும், என்று கோரிக்கை விடுத்தாா்.
அப்போது, அரசுத் தரப்பில், இந்த விவகாரத்தில் முழு அமா்வு உத்தரவு பிறப்பிக்கும்வரை கொடிக் கம்பங்களை அகற்றுவது தொடா்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது எனத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வழக்கின் விசாரணையை ஆக.18-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டாா்.