மெதுவாக பந்துவீசிய பாகிஸ்தான்: 3-வது போட்டிக்கும் அபராதம்!
முகமது ரிஸ்வான் தலைமையிலான பாகிஸ்தான அணி நியூசிலாந்துக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் ஸ்லோ-ஓவர் ரேட்டில் மெதுவாக பந்துவீசியதற்காக அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ஐசிசி தெரிவித்துள்ளது.
நியூசிலாந்து - பாகிஸ்தான் அணிகள் மோதிய ஒருநாள் தொடரின் மூன்றாவது மற்றும் கடைசி ஆட்டம் மௌண்ட் மாங்கனுவில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் நியூசிலாந்து அணி 43 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் நியூசிலாந்து அணி 3-0 என்ற கணக்கில் தொடரை முழுமையாகக் கைப்பற்றியது.
இந்தப் போட்டியில் வழக்கமான நேரத்தைவிட பாகிஸ்தான் அணி ஒரு ஓவர் மெதுவாக பந்து வீசியதற்காக, அந்த அணி வீரர்களுக்கு போட்டிக் கட்டணத்தில் இருந்து 5 சதவிகிதம் அபராதம் விதிக்கப்படுவதாக எலைட் பேனல் நடுவர் ஜெஃப் க்ரோவ் தெரிவித்தார்.
ஐசிசி சட்டவிதி 2.22-ன் படி மெதுவாக பந்துவீசும் அணிக்கு 5 சதவிகிதம் அபராதம் விதிக்கப்படும். களநடுவர்கள் கிறிஸ் பிரவுன் மற்றும் பால் ரீஃபல் இருவரும் குற்றம் சாட்டியதைத் தொடர்ந்து கேப்டன் முகமது ரிஸ்வான் இதை ஒப்புக்கொண்டார்.
முதல் இரண்டு போட்டிகளிலும் பாகிஸ்தான் அணிக்கு அபராதம் விதிக்கப்பட்டிருந்த நிலையில், மூன்றாவது போட்டியிலும் பாகிஸ்தான் அணிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.