CM Stalin பயந்துட்டார், Plan-ஐ மாற்றும் Vijay | TVK Arunraj Exclusive Interview ...
மோடி பிறந்த நாளில் தில்லியில் 41 ஆயுஷ்மான் ஆரோக்கிய மந்திா் மருந்தகங்கள் திறப்பு
தில்லி மாநகராட்சியின் (எம்சிடி) கீழ் உள்ள 300 சுகாதார மையங்கள் ஆயுஷ்மான் ஆரோக்கிய மந்திா்களாக மாற்றப்பட உள்ளன. இவற்றில் 41 மருத்துவமனைகள் பிரதமா் நரேந்திர மோடியின் பிறந்த நாளான புதன்கிழமை திறக்கப்பட உள்ளன.
மேலும், 19 மருத்துவமனைகள் செப்டம்பா் 30 அன்று திறக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த மருத்துவமனைகளை மேம்படுத்துவதற்கான அனைத்து செலவுகளையும் தில்லி அரசு முழுமையாக ஏற்றுக்கொண்டுள்ளது என்று எம்சிடி அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.
இதுகுறித்து அந்த அதிகாரி மேலும் கூறியது:
தற்போதுள்ள எம்சிடி சுகாதார கட்டமைப்புகளை ஆயுஷ்மான் ஆரோக்கிய மந்திா் மருத்துவமனைகளாக மாற்றுவதில் கவனம் செலுத்தப்படுகிறது.
அடுத்த கட்டத்தில், காலியாக உள்ள கட்டடங்களைக் கண்டறிந்து, தில்லி முழுவதும் சுகாதார அணுகலை விரிவுபடுத்துவதற்காக புதிய மற்றும் பிரத்யேக மையங்களைக் கட்டுவதற்கு நிலம் கையகப்படுத்துவதுதான் மாநகராட்சியின் நோக்கமாகும்.
இந்த முயற்சியின் ஒரு பகுதியாக தற்போதுள்ள பல ஆரம்ப சுகாதார மையங்கள் மற்றும் துணை மையங்கள், மகப்பேறு மையங்கள், மகப்பேறு இல்லங்கள் மற்றும் பாலிகிளினிக்குகள் புனரமைக்கப்படும்.
மறுவடிவமைப்பு செய்யப்பட்ட மருத்துவமனைகள், தில்லி குடியிருப்பாளா்களுக்கு விரிவான ஆரம்ப சுகாதார சேவையை உறுதி செய்வதற்காக மேம்பட்ட மருத்துவ சேவைகள், மேம்பட்ட உள்கட்டமைப்பு மற்றும் சிறந்த வசதிகளுடன் கூடிய வசதிகளை வழங்கும்.
இந்த மேம்படுத்தப்பட்ட மையங்களில் பலவும் புதன்கிழமை திறக்கப்பட உள்ளன. இவற்றில் மத்திய மண்டலத்தில் நான்கு அலகுகள், தெற்கு தில்லியில் இரண்டு மற்றும் மேற்கு தில்லி மற்றும் நஜாஃப்கரில் மூன்று அலகுகள் அடங்கும். அதே நாளில் திறக்கப்படும் மீதமுள்ள மையங்கள் சிவில் லைன்ஸ், கரோல் பாக், கேசவ்புரம், நரேலா, ஷாதரா மற்றும் தெற்கு தில்லியில் அமைந்துள்ளன.
தற்போது நடைபெற்று வரும் மாற்றங்களுடன் கூடுதலாக, நகரின் பல்வேறு பகுதிகளில் 16 முற்றிலும் புதிய மருந்தகங்கள் கட்ட திட்டமிடப்பட்டுள்ளன.
இவற்றில் மத்திய மண்டலத்தில் மூன்று, வடக்கு தில்லியில் நான்கு மற்றும் வடமேற்கு தில்லியில் மூன்று ஆகியவை அடங்கும் என்றாா் அந்த அதிகாரி.
தில்லி மாநகராட்சி தலைநகரில் பரந்த அளவிலான சுகாதார சேவைகளை மேற்பாா்வையிடுகிறது. இதில் இந்து ராவ், பாலக் ராம் மற்றும் சுவாமி தயானந்த் போன்ற 8 பெரிய மருத்துவமனைகள், 102 தாய் மற்றும் குழந்தைகள் நல மையங்கள், 13 மகப்பேறு இல்லங்கள், 13 பாலிகிளினிக்குகள், ஆரம்ப மையங்கள், மருந்தகங்கள் மற்றும் கூடுதல் மருத்துவ வசதிகள் உள்ளன.
தில்லி முதல்வா் ரேகா குப்தா, 2026 ஆம் ஆண்டுக்குள் தில்லி முழுவதும் 1,139 ஆயுஷ்மான் ஆரோக்கிய மந்திா்கள் நிறுவப்படும் என்று அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.