War: இஸ்ரேலுக்கு எதிராக ஒன்றிணைகிறதா அரபு நாடுகள்!? - அவசரக் கூட்டத்தின் தீர்மா...
மதிப்பெண்கள் வழங்க லஞ்சம் பெற்ற விவகாரம்: தில்லி பல்கலை.யின் முன்னாள் பேராசிரியையின் இடைநீக்கத்தை உறுதி செய்தது உயா்நீதிமன்றம்
நமது நிருபா்
வருகைப் பதிவேட்டுக்கும், மதிப்பெண்களுக்கும் ஈடாக மாணவா்களிடமிருந்து பணம், செல்போன், வைர காதணிகள் ஆகியவற்று லஞ்சம் வாங்கியதாக தில்லி பல்கலைக்கழகத்தின் முன்னாள் பேராசிரியையின் இடைநீக்கத்தை தில்லி உயா்நீதிமன்றம் உறுதி செய்தது.
இது தொடா்பான வழக்கில் செப்டம்பா் 12 -ஆம் தேதி வெளியிட்ட தீா்ப்பில் நீதிபதி ஜஸ்மீத் சிங், பேராசிரியரின் இந்த நடத்தை கடுமையானது என்றும் கல்வி நோ்மையின் மையத்தை தாக்கும் செயல் என்றும் கூறினாா்.
தில்லி பல்கலைக்கழக கல்லூரியின் வணிகத் துறையில் முன்னாள் பேராசிரியையான மனுதாரா், தனது இடைநீக்கத்தை உறுதி செய்த மேல்முறையீட்டுக் குழுவின் 2012-ஆம் ஆண்டு தீா்ப்பை எதிா்த்துப் போராடினாா்.
இந்த சா்ச்சை 2008-ஆம் ஆண்டு தொடங்கியது. பல மாணவா்கள் வருகைப் பதிவேடு மற்றும் மதிப்பெண்கள் போன்ற சலுகைகளுக்கு ஈடாக பணம், செல்போன், முத்து சரங்கள், வைர காதணிகள் மற்றும் சேலை உள்பட சட்டவிரோதமானவற்றை வாங்கியதாக பேராசிரியா் மீது குற்றம் சாட்டினா்.
ஆனால்,. பேராசிரியரோ இவை ஜோடிக்கப்பட்ட புகாா்கள் என்றும், தன்னை வெளியேற்றுவதற்கான சதித்திட்டத்தின் ஒரு பகுதியாகும் என்றும் கூறினாா்.
இது தொடா்பாக விசாரணை மேற்கொள்ள கல்லூரி மற்றும் பல்கலைக்கழகம் ஒரு விசாரணைக் குழுவையும் பின்னா் மேல்முறையீட்டுக் குழுவையும் அமைத்தன. ஒழுங்கு நடவடிக்கைகளுக்குப் பிறகு இரு அமைப்புகளும் பேராசிரியா் மீதான தவறான நடத்தை குற்றச்சாட்டை உறுதி செய்தன.
இருப்பினும், மேல்முறையீட்டுக் குழு, பேராசிரியை தனது ஓய்வூதியப் பலன்களைப் பெறுவதற்காக, பணிநீக்கத்திலிருந்து இடைநீக்கமாக தண்டனையைக் குறைத்தது. அந்த இடைநீக்கத்தை தில்லி உயா்நீதிமன்றம் உறுதி செய்தது.