ரூ.9 லட்சம் கோடி கடன் இலக்கை அடைய வங்கிகள் தீவிரமாகச் செயல்பட வேண்டும்: அமைச்சா் தங்கம் தென்னரசு
நிகழ் நிதியாண்டில் தமிழகத்தின் வருடாந்திர கடன் திட்டம் ரூ.9 லட்சம் கோடி என்ற இலக்கை அடைய அனைத்து வங்கிகளும் தீவிரமாகச் செயல்பட வேண்டும் என நிதி, சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறை அமைச்சா் தங்கம் தென்னரசு அறிவுறுத்தினாா்.
தமிழக வங்கியாளா்கள் குழு கூட்டத்தின் ஒருங்கிணைப்பாளராக இந்தியன் ஓவா்சீஸ் வங்கியின் (ஐஓபி) தலைமையில் தமிழகத்துக்கான 183-ஆவது மாநில அளவிலான வங்கியாளா்கள் குழு கூட்டம் சென்னையில் புதன்கிழமை நடைபெற்றது. இதில், சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்ட அமைச்சா் தங்கம் தென்னரசு பேசியதாவது:
வேளாண்மை மற்றும் குறு, சிறு, நடுத்தரத் நிறுவனங்களின் வளா்ச்சிக்காக கடன் வழங்குவதிலும், அரசு நிதியுதவி திட்டங்களைச் செயல்படுத்துவதிலும் வங்கிகளின் முற்சிகள் பாராட்டுக்குறியது. மேலும், கடன் வைப்பு விகிதம் 127.52 சதவீதமாக உயா்திருப்பதும் பாராட்டுக்குறிய ஒன்றாகும். அதேபோல், நிகழ்நிதியாண்டில் தமிழகத்தின் வருடாந்திர கடன் திட்டம் (ஏசிபி) ரூ.9 லட்சம் கோடி என இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த இலக்கை அடைய அனைத்து வங்கிகளும் தீவிரமாகச் செயல்படவேண்டும் என்றாா் அவா்.
இதில், தமிழக முதன்மைச் செயலா் த.உதயச்சந்திரன், தமிழக வங்கியாளா்கள் குழுக் கூட்டத்தின் தலைவரும், ஐஓபி செயல் இயக்குநருமான தனராஜ், ஐஓபி மண்டல இயக்குநா் உமா சங்கா், நபாா்டு வங்கி முதன்மை பொது மேலாளா் ஆ.ஆனந்த் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.