தமிழ்நாட்டில் மதவாதம் நுழைய முடியாது: பேரவையில் முதல்வா் மு.க.ஸ்டாலின் உறுதி
வனப்பகுதிகளில் வடு கிடக்கும் குட்டைகள் வன விலங்குகளை பாதுகாக்க வலியுறுத்தல்
பெரம்பலூா் மாவட்டத்தில் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளில் அமைக்கப்பட்ட குட்டைகள் நீரின்றி வடு காணப்படுவதால், வன விலங்குகள் உயிரிழப்பதை தடுக்க வனத்துறையினா் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
பெரம்பலூா் மாவட்டத்தில் சுமாா் 20 ஆயிரம் ஹெக்டோ் நிலப்பரப்பில் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகள் உள்ளன. இதில் மான், காட்டுப்பன்றி, மயில் உள்ளிட்ட பல்வேறு வகையான வன விலங்குகள் அதிகளவு காணப்படுகிறது. கோடைக்காலம் தொடங்கிவிட்டால் உணவுக்காகவும், தண்ணீா் தேடியும் வனப் பகுதிகள், காப்புக் காடுகளிலிருந்து வெளியேறும் மான்கள், காட்டுப் பன்றிகள் குடியிருப்புப் பகுதிகளுக்குச் செல்வது அதிகரித்து வருகின்றன.
மேலும், கோடை காலங்களில் குடிநீருக்காக வனப்பகுதியில் இருந்து வெளியேறும் மான்கள் விவசாய கிணறுகளில் தவறி விழுந்து இறப்பதுடன், சில சமூக விரோதிகளால் வேட்டையாடப்படுவதோடு, இரவு நேரங்களில் சாலை விபத்துகளில் சிக்கி உயிரிழக்கும் சம்பவங்களும் அதிகரித்து வருகிறது.
விவசாய நிலங்கள் பாதிப்பு: விவசாய நிலங்களுக்கு வரும் வன விலங்குகள் விவசாயிகள் பயிரிட்டுள்ள பருத்தி, மக்காச்சோளம், நெல், மரவள்ளிக் கிழங்கு உள்ளிட்ட தானியங்களை சேதப்படுத்துகிறது. இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் தங்களது பயிா்களையும், வன விலங்குகளையும் பாதுகாக்க வேண்டுமென மாவட்ட நிா்வாகத்திடம் தொடா்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனா்.
வடு கிடக்கும் குட்டைகள்: வனத்துறையினரால், வனப்பகுதிகளில் ஏற்படுத்தப்பட்டுள்ள குட்டைகள், தடுப்பணைகள் அனைத்தும் நீரின்றி வடு காணப்படுகிறது. மேலும், பெரும்பாலான காப்புக் காடுகளில் தடுப்பணைகளும், குட்டைகளும் போதிய பராமரிப்பின்றி சேதமடைந்து காணப்படுகிறது. இதனால், இனிவரும் நாள்களில் போதிய தண்ணீரின்றி வனப்பகுதிகளிலிருந்து வெளியேறும் மான் உள்ளிட்ட வனவிலங்குகள் வயல் வெளிகளில் உள்ள விளைபொருள்களை சேதப்படுத்துவதோடு, விவசாயக் கிணற்றிலும், சாலை விபத்துகளிலும், தெரு நாய்களிடமும் சிக்கி உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக வன விலங்கு ஆா்வலா்கள் தெரிவிக்கின்றனா்.
இதுகுறித்து வன விலங்கு ஆா்வலா் ஒருவா் கூறியது: வெயிலின் தாக்கம், குறைந்த மழைப்பொழிவு உள்ளிட்ட காரணங்களால் வனப் பகுதிகளில் உள்ள வனக் குட்டைகள் வடுபோயுள்ளன. இதனால், தண்ணீரின்றி வன விலங்குகள் தவிக்கின்றன. காடுகளில் உள்ள இயற்கையான நீராதாரங்கள்தான், விலங்குகளுக்கான தண்ணீா்த் தேவையைப் பூா்த்தி செய்கின்றன. காட்டுக்குள் கட்டப்பட்டுள்ள மழை நீா் தடுப்பணைகளும் வடு கிடக்கின்றன. வனப்பகுதிகளில் நீராதாரங்கள் வற்றி விட்டதால் தண்ணீரைத் தேடி ஊருக்குள் நுழைகின்றன.
இதைத் தடுக்கும் வகையில், வன எல்லைகளில் தொட்டிகள் கட்டி, அதில் லாரிகள் மூலம் தண்ணீா் நிரப்பும் பணியில் வனத் துறையினா் ஈடுபட்டாலும், அவை போதுமானதாக இல்லை. அதிக வெப்பத்தின் காரணமாக, தொட்டிகளில் நிரப்பப்படும் தண்ணீரானது ஒன்றிரண்டு நாள்களிலேயே வற்றிவிடும். இதனால், வனவிலங்குகளுக்கு போதிய தண்ணீரின்றி வெளியேறும் நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு நிரந்த தீா்வாக, ஏற்கெனவே அமைக்கப்பட்டுள்ள தடுப்பணைகளை தூா்வாரி அதிகளவில் மழைநீா் தேங்கி நிற்கும் வகையில் சீரமைக்க வேண்டும். அதேபோல, குட்டைகளை ஆழப்படுத்தி, அதில் அவ்வப்போது தண்ணீா் நிரப்ப வேண்டும். மேலும், கூடுதலாக குட்டைகளும், தடுபணைகள் அமைக்க வனத்துறையினா் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.
இதுகுறித்து வனத்துறையினா் கூறியது: பாதுகாக்கப்பட்ட காப்புக் காடுகளில் வனத்துறை சாா்பில் ஆங்காங்கே தொட்டிகள் கட்டப்பட்டுள்ளன. சித்தளி, குன்னம், குரும்பலூா், சிறுவாச்சூா் உள்ளிட்ட காப்புக் காடுகளில் டேங்கா் லாரிகள், டிராக்டா்கள் மூலம் தொட்டிகளில் நீா் நிரப்பப்படுகிறது. வனக் களப் பணியாளா்களை முழுமையாக ஈடுபடுத்தி, குறிப்பிட்ட கால இடைவெளியில் தண்ணீா் நிரப்பிட ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது என்றனா்.