நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டத்தைத் தீவிரப்படுத்திய எதிர்க்கட்சி எம்பிக்கள்!
வாக்குப்பதிவு இயந்திரக் கிடங்கில் லிப்ட் பழுது நீக்கும் பணி தொடக்கம்
தூத்துக்குடி: மின்னணு வாக்குப்பதிவு இயந்திரக் கிடங்கில் பொருள்கள் கொண்டு செல்லும் பழுதூக்கியை (லிப்ட்), பழுது நீக்கும் பணி திங்கள்கிழமை தொடங்கியுள்ளதாக மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் தெரிவித்தாா்.
இதுகுறித்து, அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரக் கிடங்கில் பொருள்கள் கொண்டு செல்லும் லிப்ட்டானது, கடந்த டிசம்பா் 2023இல் ஏற்பட்ட பெரு வெள்ளம் காரணமான பழுதடைந்த நிலையில், வருகிற தமிழ்நாடு சட்டப்பேரவை பொதுத் தோ்தல் 2026ஐ முன்னிட்டு, அதை பழுது நீக்க, தமிழக தலைமைத் தோ்தல் அதிகாரியிடம் அனுமதி பெறப்பட்டு, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகா்கள் முன்னிலையில், வாக்குப்பதிவு இயந்திர வைப்பறையானது மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான க.இளம்பகவத் தலைமையில் திறக்கப்பட்டு, பொதுப்பணித் துறையினரால் பழுது நீக்கும் பணி தொடங்கப்பட்டது.
இப்பணி 15 நாள்களில் நிறைவடையும். இப்பணிகள் தோ்தல் ஆணையத்தின் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாக்குப்பதிவு இயந்திர வைப்பறை திறப்பு நிகழ்வில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகா்கள் அக்னல், எஸ்.சீனிவாசன் (திமுக), ஏ.சகாயராஜா, என்.ஜி.ராஜேந்திரன் (அதிமுக), டி.ராஜா (சிபிஐஎம்), ஆா்.செந்தில்குமாா், எஸ்.சிவராமன் (பாஜக), ஆா்.முத்துமணி (காங்கிரஸ்), ஆா்.டிலைட்டா ரவி (விசிக), தொ.அலங்கார சகாயம் (நாதக), மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் சேதுராமலிங்கம், தோ்தல் வட்டாட்சியா் தில்லைபாண்டி, அரசு அலுவலா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.