கள்ளத்தனமாக மது விற்போா், காய்ச்சுவோரை கண்காணிக்க வேண்டும்: திருவள்ளூா் ஆட்சியா்
விமான நிலையம் அருகே பலூன், லேசர் பயன்படுத்தத் தடை
சென்னை விமான நிலையம் அருகே பலூன்கள் மற்றும் லேசர் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சென்னை விமான நிலைய நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், விமானம் தரையிறங்கும்போது கீழே இருந்து லேசர் ஒளியை செலுத்தினால், விமானிக்கு சிரமத்தை ஏற்படுத்தும் என்பதால், விமான நிலையம் அருகே அதைப் பயன்படுத்த தடை விதிக்கப்படுகிறது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
லேசர் மற்றும் பலூன்களை விமான நிலையம் அருகே பயன்படுத்தினால் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளது.
சென்னை விமான நிலையத்தில் தரையிறங்கும் விமானங்கள் மீது பச்சை நிற லேசர் அடிக்கும் சம்பவங்கள் சமீபகாலமாக அதிகரித்து வரும் நிலையில், விமான நிலைய நிர்வாகம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
கடந்த இரு வாரங்களுக்கு முன்பு விமான நிலையத்தில் தரையிறங்கும்போது விமானத்தின் மீது பச்சை நிற லேசர் அடிக்கப்பட்டது. பின்னர் கட்டுப்பாட்டு அறைக்குத் தொடர்புகொண்டு விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டது.
ஜூன் 5ஆம் தேதி துபையில் இருந்து சென்னை வந்த எமிரேட்ஸ் விமானத்திலும் பச்சை நிற லேசர் அடிக்கப்பட்டது. இந்த ஒளி விமானியின் கண்களை கூசச் செய்வதால், வேறு வழியின்றி விமானத்தை சற்று மேலே எழுப்பி மீண்டும் விமான நிலையத்தில் பத்திரமாகத் தரையிறக்கினார்.
இவ்வாறு விமானங்கள் மீது லேசர் அடிப்பது தொடர்கதையாகிவருவதால், சென்னை விமான நிலையம் அருகே லேசர் மற்றும் பலூன்களைப் பயன்படுத்த விமான நிலைய நிர்வாகம் தடை விதித்துள்ளது.