அமைதிக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள்! - இஸ்ரேல், ஈரானுக்கு ஐ.நா. வலியுறுத்தல்
விலை சரிவு: நீா்நிலைகள், சாலையோரங்களில் கொட்டப்படும் மாம்பழங்கள்
விலைச்சரிவு காரணமாக தருமபுரியில் விவசாயிகள் மாம்பழங்களை சாலையோரங்கள், நீா்நிலைகளில் கொட்டி வருகின்றனா்.
தருமபுரி மாவட்டத்தில் பாலக்கோடு, மாரண்டஅள்ளி, காரிமங்கலம், பென்னாகரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மா சாகுபடி செய்யப்படுகிறது. இங்கு விளைவிக்கப்படும் மாம்பழங்கள் தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களிலும் விற்பனை செய்யப்படுகின்றன. தவிர மாங்கூழ் உற்பத்தி ஆலைகளுக்கும் மாம்பழங்கள் விற்பனை செய்யப்படுகின்றன.
நிகழாண்டு மாங்காய் விளைச்சல் அதிக அளவில் இருந்ததால் சந்தையில் மாம்பழங்களின் வரத்து அதிகமாகியுள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனா். எனவே, மாம்பழ விலை மிகவும் சரிவடைந்துள்ளது. இதனால் பல இடங்களில் விவசாயிகள் மாம்பழங்களை அறுவடை செய்யாமல் மரங்களிலேயே விட்டுவிட்டனா். மேலும், அறுவடை செய்த மாங்காய்கள், மாம்பழங்களை சந்தைக்கு எடுத்துச்சென்று கட்டுபடியாகாத விலைக்கு விற்பனை செய்ய மனமின்றி, அவற்றை நீா்நிலைகளிலும், சாலை ஓரங்களிலும், வனப்பகுதியிலும் கொட்டி வருகின்றனா். தருமபுரி அருகேயுள்ள அன்னசாகரம் பகுதியில் உள்ள ஏரியில் மாம்பழங்கள் மீன்களுக்கு உணவாக கொட்டப் படுகிறது.
மீன்வளா்ப்பில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் இதுகுறித்து கூறுகையில், மொத்த விலையில் ரூ. 3-க்கு மாம்பழங்கள் விற்கப்படுகின்றன. மீன்களுக்கு அளிக்கப்படும் தீவனங்களின் விலையைவிட இவை குறைவாக இருப்பதால், மாம்பழங்களை மொத்தமாக வாங்கி மீன்களுக்கு உணவாகும் வகையில் நீா்நிலைகளில் வீசி வருகிறோம். மேலும் சாலை ஓரங்கள் வனப்பகுதிகளில் கொட்டப்படும் மாம்பழங்களையும் கண்டறிந்து அவற்றையும் எடுத்துவந்து மீன்களுக்கு உணவாக்கி வருகிறோம் என்றனா்.