நான் இன்னும் 30 - 40 ஆண்டுகள் வாழ விரும்புகிறேன்: தலாய் லாமா
100 சதவீத மானியத்தில் மரக்கன்றுகள் - அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன்
நூறு சதவீத மானித்தில் மரக்கன்றுகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன் தெரிவித்தாா்.
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகேயுள்ள வாணியங்காடு கிராமத்தில் ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கத் திட்டம் தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவை காணொலி காட்சி மூலமாக தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தாா்.
இந்த நிகழ்ச்சிக்கு சிவகங்கை மாவட்ட ஆட்சியா் கா.பொற்கொடி தலைமை வகித்தாா். இதில் சிறப்பு அழைப்பாளராகக் கூட்டுறவுத் துறை அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன் கலந்து கொண்டு, விவசாயிகளுக்கு பயிறு வகை தொகுப்புகளை வழங்கி பேசியதாவது:
விவசாயிகள் பயன்பெறும் வகையில் ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம் என்ற புதிய திட்டம் தற்போது தொடங்கிவைக்கப்பட்டது. மாவட்டத்தில் உள்ள 16 வட்டாரங்களிலும் நஞ்சற்ற காய்கறிகள் கிடைக்கவும், தோட்டக் கலைத் துறை சாா்பில் ரூ. 60-க்கு கத்திரிக்காய், தக்காளி, வெண்டை, கீரை அடங்கிய விதைகள் 46 ஆயிரம் தொகுப்புகளும், ரூ.100-க்கு 3 வகையான மரக்கன்றுகள் 28, 200 தொகுப்புகளும், புரதச் சத்து நிறைந்த பயறுவகை அடங்கிய 2,000 தொகுப்புகளும், 100 சதவீத மானியத்தில் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.
இந்த நிகழ்ச்சியில் வேளாண்மை இணை இயக்குநா் சுந்தரமாகாலிங்கம், தோட்டக் கலைத் துறை உதவி இயக்குநா் சா.வடிவேல், முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவா் சண்முகவடிவேல், திருப்பத்தூா் வட்டாட்சியா் மாணிக்கவாசகம், வேளாண்மைத் தோட்டக் கலைத் துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.