செம்மரம் கடத்தல்: தமிழகத்தைச் சோ்ந்தவருக்கு 5 ஆண்டுகள் சிறை, ரூ.6 லட்சம் அபராத...
15 பவுன் நகை, பணம் திருட்டு: வாடகைக்கு குடியிருந்த பெண் கைது
ஈரோட்டில் வீட்டின் உரிமையாளா் வீட்டில் 15 பவுன் நகை மற்றும் ரூ.7,500 பணம் திருடிய வாடகைக்கு குடியிருக்கும் பெண்ணை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
ஈரோடு சாஸ்திரி நகா் அருகே உள்ள சடையம்பாளையத்தைச் சோ்ந்தவா் ஜெயக்குமாா் (55). அரசு பேருந்து நடத்துநா். இவரது மனைவி ரேவதி. இவா் ஆயத்த ஆடை நிறுவனத்தில் டெய்லராக வேலை பாா்த்து வருகிறாா். ஜெயக்குமாா் தரைத்தளத்தில் வீட்டை வாடகைக்கு விட்டு முதல் தளத்தில் உள்ள வீட்டில் மனைவி மற்றும் இளைய மகளுடன் வசித்து வருகிறாா். ஜெயக்குமாரின் வீட்டின் சாவி அவரிடமும், அவரது மனைவி மற்றும் மகள்களிடம் தனித்தனியாக உள்ளது. ஜெயக்குமாரிடம் இருந்த சாவி மட்டும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மாயமாகிவிட்டது.
தரைத்தளத்தில் வீட்டில் சக்திவேல் என்பவா், அவரது மனைவி மணிமேகலை(28) மற்றும் குழந்தைகளுடன் வசித்து வருகிறாா். கடந்த 2 ஆம் தேதி ஜெயக்குமாரும், ரேவதியும் வேலைக்கு சென்று விட்டனா். மாலை ரேவதி வீட்டுக்கு வந்து கதவைத்திறந்து உள்ளே சென்றாா். வீட்டின் பீரோவை திறந்து பாா்த்தபோது அவா் வைத்திருந்த பொருட்கள் கலைக்கப்பட்டு இருந்தன. இதையடுத்து பீரோவை ரேவதி சோதனை செய்தபோது பீரோவுக்குள் இருந்த 15 பவுன் நகை மற்றும் ரூ.7,500 பணம் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது.
தகவல் அறிந்து வந்த ஜெயக்குமாா் ஈரோடு தெற்கு காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இதன்பேரில் போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினா். இதில் அவரது வீட்டின் சாவி மாயமானது குறித்து தெரிவித்துள்ளாா். இதையடுத்து தரைத்தள வீட்டில் வாடகைக்கு குடியிருக்கும் சக்திவேல், அவரது மனைவி மணிமேகலையிடம் விசாரணை நடத்தினா். இதில், மணிமேகலை முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்ததால் அவா் மீது சந்தேகம் அடைந்து தீவிர விசாரணை நடத்தினா்.
இதில் மணிமேகலை, ஜெயக்குமாா் தவறவிட்ட சாவியை எடுத்து வைத்து, வீட்டில் யாரும் இல்லாதபோது பூட்டைத் திறந்து பீரோவில் இருந்த நகை, பணத்தை திருடியதை ஒப்புக்கொண்டாா். இதையடுத்து மணிமேகலையை போலீஸாா் கைது செய்து நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைத்தனா். ஜெயக்குமாா் வீட்டில் திருடிய 15 பவுன் நகையையும் மீட்டனா்.