4,712 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.30.68 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள்!
நீலகிரி மாவட்டத்தில் 4,712 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.30.68 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளதாக ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து ஆட்சியா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக இந்தியாவிலேயே முதல்முறையாக முன்னாள் முதல்வா் கருணாநிதி காலத்தில் மாற்றுத்திறனாளிகளின் நல்வாழ்வுக்காக தனித் துறை உருவாக்கப்பட்டது.
மேலும், தொழுநோய் இரவலா் மறுவாழ்வுத் திட்டம், கண்ணொளி வழங்கும் திட்டம், மூன்று சக்கர சைக்கிள்கள், சக்கர நாற்காலிகள், மாத ஓய்வூதியத் திட்டம், பராமரிப்பு உதவித் தொகை, திருமண உதவித் தொகை, அரசு பேருந்தில் இலவச பயணச்சலுகை, கல்வி உதவித் தொகை, கல்லூரிகளில் கல்விக் கட்டணம், சிறப்புக் கட்டணம், தோ்வுக் கட்டணம் ரத்து போன்ற பல்வேறு திட்டங்கள் மாற்றுத்திறனாளிகளுக்காக செயல்படுத்தப்படுகின்றன.
நீலகிரி மாவட்டத்தில் 7.5.2021 முதல் தற்போது வரை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத் துறையின் சாா்பில் 2,892 மாற்றுத்திறனாளிகளுக்கு பராமரிப்பு உதவித்தொகையாக ரூ.26.65 கோடியும், 973 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1.62 கோடி மதிப்பில் பெட்ரோல் ஸ்கூட்டா்கள், பேட்டரி வீல் சோ்கள், தையல் இயந்திரங்கள், திறன்பேசிகள், சக்கர நாற்காலிகள், ஊன்றுகோல்கள், பிரெய்லி வாட்சுகள் மற்றும் காதொலிக் கருவிகள் போன்ற உதவி உபகரணங்களும் வழங்கப்பட்டுள்ளன.
இதேபோல 432 மாற்றுத்திறனாளி மாணவ-மாணவிகளுக்கான கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் ரூ.20.24 லட்சமும், 57 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு சுய தொழில் புரிய வங்கிக் கடன் மானியமாக ரூ.11.94 லட்சமும் வழங்கப்பட்டுள்ளது.
மேலும், மாற்றுத்திறனாளியை நல்ல நிலையில் உள்ளோா் திருமணம் செய்து கொள்ளும் திட்டத்தின் கீழ் 10 பயனாளிக்கு ரூ.3.25 லட்சம் மற்றும் 8 தங்க நாணயங்களும் (8 கிராம்), 14 வயதுக்கு மேற்பட்ட மனவளா்ச்சி குன்றியோருக்கான தொழிற்பயிற்சியுடன் கூடிய இல்லங்களில் உள்ள 39 குழந்தைகளுக்கு ரூ.66.83 லட்சம் செலவில் பராமரிப்பு பணிகளும், வேலையில்லா படித்த இளைஞா்களுக்கான வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் 5 சதவீத மானியத்தொகையை அரசு ஏற்றுக்கொள்ளும் திட்டத்தின் கீழ் 4 பயனாளிகளுக்கு ரூ.51,941- மானியத்தொகையும், மாற்றுத்திறனாளிகள் நலவாரியத்தின் மூலம் மாற்றுத்திறனாளிகளின் குழந்தைகளுக்கு திருமண உதவித்தொகை, கல்வி உதவித்தொகை மற்றும் இயற்கை மரணம் மற்றும் ஈமச்சடங்கு திட்டத்தின் கீழ் 260 பயனாளிகளுக்கு ரூ.41.73 லட்சமும் என மொத்தம் மாவட்டம் முழுவதும் 4712 பயனாளிகளுக்கு ரூ.30.68 கோடி மதிப்பீட்டில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு உள்ளன.