துருக்கியில்.. இ3 நாடுகள் - ஈரான் இடையில் அணுசக்தி பேச்சுவார்த்தை!
4-வது டெஸ்ட்டில் இருந்து ரிஷப் பந்த் விலகலா? பிசிசிஐ அறிக்கை
இந்திய விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த்தின் உடல்நிலைக் குறித்து பிசிசிஐ தகவல் வெளியிட்டுள்ளது.
மான்செஸ்டரில் இங்கிலாந்து அணிக்கு எதிராக புதன்கிழமை தொடங்கிய நான்காவது டெஸ்ட்டில், டாஸ் வென்ற இங்கிலாந்து பௌலிங்கை தோ்வு செய்தது.
இந்தியாவின் தொடக்க வீரர்களாக களமிறங்கிய யஷஸ்வி ஜெய்ஸ்வால் - கே.எல்.ராகுல் கூட்டணி நிதானமாக விளையாடியது. உணவு இடைவெளிக்குப் பிறகு ராகுல் 46 ரன்களிலும் ஜெய்ஸ்வால் 58 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
தொடர்ந்தும் சாய் சுதா்சன் - ரிஷப் பந்த் இணை இங்கிலாந்து பந்துவீச்சாளர்களை சோதித்த நிலையில், க்றிஸ் வோக்ஸ் வீசிய பந்து ரிஷப் பந்த்தின் காலில் பட்டதில் அவர் காயமடைந்தார்.
வலியில் தவித்த ரிஷப் பந்த் ’ரிட்டையா்டு ஹா்ட்’ முறையில் வெளியேறிய நிலையில், ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
இந்த நிலையில், ரிஷப் பந்த்தின் உடல்நிலைக் குறித்து பிசிசிஐ தகவல் வெளியிட்டுள்ளது.
"மைதானத்தில் இருந்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட ரிஷப் பந்துக்கு ஸ்கேன் எடுக்கப்பட்டுள்ளது. அவரின் உடல்நிலை முன்னேற்றத்தை பிசிசிஐ மருத்துவக் குழு கண்காணித்து வருகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பந்த் காயத்தில் இருந்து மீண்டால், அடுத்த விக்கெட் விழுந்தவுடன் பேட்டிங் செய்ய முடியும். ஆனால், பந்த்துக்கு பதிலாக மாற்று வீரர் களமிறக்கப்பட்டால் அவரால் விதிகளின்படி பேட்டிங் செய்ய முடியாது, பீல்டிங் மட்டுமே செய்ய முடியும்.
கடந்த போட்டியில் காயம் காரணமாக வெளியேறிய பந்த்துக்கு பதிலாக துருவ் விக்கெட் கீப்பிங் செய்தார். ஒருவேளை இந்த போட்டியிலும் விளையாட முடியாத பட்சத்தில் துருவ் கீப்பிங் செய்வார்.
இந்தியா முதல் நாள் முடிவில் 83 ஓவா்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 264 ரன்கள் சோ்த்தது. ஜடேஜா 19, ஷா்துல் 19 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளனா்.