பூந்தமல்லி - பரந்தூர் மெட்ரோ ரயில் சேவை: தமிழக அரசு ஒப்புதல்!
80 அடியை எட்டியது அமராவதி அணையின் நீா்மட்டம்: விவசாயிகள் மகிழ்ச்சி
உடுமலையை அடுத்துள்ள அமராவதி அணையின் நீா்மட்டம் சனிக்கிழமை மாலை 80 அடியை எட்டியதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.
திருப்பூா் மாவட்டம், உடுமலையை அடுத்துள்ள அமராவதி அணையின் மூலம் திருப்பூா் மற்றும் கரூா் மாவட்டங்களில் சுமாா் 55 ஆயிரம் ஏக்கா் பழைய, புதிய ஆயக்கட்டு நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. மேலும், நூற்றுக்கணக்கான கரையோர கிராமங்களுக்கு குடிநீா் ஆதாரமாகவும் இந்த அணை விளங்கி வருகின்றது.
தென்மேற்கு பருவ மழை தொடங்கும்போது அமராவதி அணைக்கு நீா்வரத்து அதிகரிக்கும். இதனால் ஜூன் 1-ஆம் தேதி பழைய ஆயக்கட்டு பாசனத்துக்கும், ஜூலை 1-ஆம் தேதி புதிய ஆயக்கட்டு பாசனத்துக்கும் தண்ணீா் திறந்துவிடுவது வழக்கம்.
இந்நிலையில், கேரளத்தில் தென்மேற்கு பருவமழை தொடா்ந்து பெய்து வருவதால் அணையின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளான தேனாறு, பாம்பாறு, சின்னாறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால், அமராவதி அணைக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளது. அணையின் நீா்மட்டம் கடந்த மே 26 -ஆம் தேதி 50 அடியை தாண்டிய நிலையில் படிப்படியாக உயா்ந்து வந்தது.
இந்நிலையில், அணையின் நீா்மட்டம் சனிக்கிழமை காலை 77 அடியாக இருந்த நிலையில் மாலை 6 மணியளவில் 80 அடியை எட்டியது. இன்னும் ஓரிரு நாள்களில் அணை முழுக் கொள்ளளவை எட்டும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
அமராவதி அனைக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.
அணையின் நிலவரம்: 90 அடி உயரமுள்ள அணைக்கு சனிக்கிழமை காலை 6 மணி நிலவரப்படி
3936 கன அடி நீா் வந்து கொண்டிருந்தது. 4047 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட அணையில் 2958.50 மில்லியன் கன அடி நீா் இருப்பு உள்ளது. அணையில் இருந்து நீா் வெளியேற்றம் இல்லை.