CSK vs MI: `மேட்ச் டிக்கெட் ரூ.20,000, ஹோட்டலுக்கு ரூ.15,000தான்' - ரசிகர்களின் பலே ஐடியா
ஐ.பி.எல் போட்டிகளின் போது சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் போட்டிகளைக் காண டிக்கெட் பெறுவது குதிரைக்கொம்பாக இருக்கிறது. அதிகாரப்பூர்வமாக டிக்கெட்டுகள் விற்கப்படும் இணையத்தில் சொற்பமான ரசிகர்களுக்கு மட்டுமே டிக்கெட் கிடைக்கிறது. மற்ற எல்லா டிக்கெட்களும் ப்ளாக்கில்தான் வருகிறது. 1700 ரூபாய் மதிப்புள்ள டிக்கெட்டை 10,000 ரூபாய் வரைக்கும் விற்கிறார்கள். உச்சகட்டமாக சேப்பாக்கம் மைதானத்தின் ப்ரீமியம் ஸ்டாண்ட்டான கருணாநிதி ஸ்டாண்ட்டின் டிக்கெட்டை 1 லட்சம் வரைக்கும் ப்ளாக்கில் விற்கிறார்கள் என்கிற வாட்ஸ் அப் சாட்கள் அதிர்ச்சியை கிளப்புகின்றன. போட்டியைக் காண ஆர்வமாக இருக்கும் ரசிகர்கள் பலருக்கும் டிக்கெட்டே கிடைப்பதில்லை. அப்படியே பார்க்க வேண்டுமானாலும் சேமிப்புகள் மொத்தத்தையும் கரைத்து ப்ளாக்கில் டிக்கெட் வாங்கவேண்டும்.

இந்த நிலையில்தான் சில ரசிகர்கள் 'மாத்தி யோசிங்க பாஸ்!' என ட்ரிக்ஸாக யோசித்து வேறொரு வழியில் குறைந்த செலவில் வீரர்களை நேரில் பார்த்துவிடும் கில்லாடித்தனத்தை செய்து வருகிறார்கள்.
அதாவது, சென்னைக்கு அணிகள் கிரிக்கெட் ஆட வரும்போது நகரத்துக்குள் உள்ள நட்சத்திர ஹோட்டல்களில்தான் அணியாக வீரர்கள் தங்கியிருப்பார்கள். போட்டியைக் காண டிக்கெட் கிடைப்பது கடினமாக இருப்பதால் வீரர்கள் எந்த ஹோட்டலில் தங்கியிருக்கிறார்கள் என்பதை அறிந்து அந்த ஹோட்டல்களில் அறையை புக் செய்து தங்கியிருந்து வீரர்கள் ஹோட்டலுக்குள் வருகையிலும் செல்கையிலும் அவர்களுடன் போட்டோ எடுத்து ஆட்டோகிராப் வாங்கிக் கொள்கின்றனர்.
ப்ளாக்கில் பல ஆயிரம் கொடுத்து டிக்கெட் வாங்குவதை விடவும் இதற்கு குறைவான செலவே ஆவதாகவும், இது ஒரு வித்தியாசமான அனுபவமாக இருப்பதாக சிலாகித்தும் சொல்கின்றனர் அந்த ரசிகர்கள்.
சேப்பாக்கத்தில் நடக்கும் சென்னைக்கு எதிரான போட்டியில் ஆட மும்பை இந்தியன்ஸ் அணி கிண்டியில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் தங்கியிருக்கிறது. அதை அறிந்து அந்த ஹோட்டலில் அறையை புக் செய்து தங்கியிருக்கும் ரசிகர்கள் சிலரிடம் பேசினோம். `சேப்பாக்கத்துல போயி லைவ்வா மேட்ச் பார்க்கணுங்றதுதான் எங்களோட ஆசை. ஆனா, சேப்பாக்கத்தில் டிக்கெட்டே கிடைப்பதில்லையே. ஆன்லைனில் வரிசையில் விட்டு டிக்கெட் கொடுக்கிறார்கள். ஆனால், யாருக்கு டிக்கெட் கிடைக்கிறது என்றே தெரியவில்லை. பெயருக்கு ஒரு சில டிக்கெட்டுகளை மட்டும் ஆன்லைனில் விட்டுவிட்டு மற்றவற்றை ப்ளாக்கில் விற்கிறார்கள்.

ப்ளாக்கில் MRP ரேட்டை விட பல மடங்கு அதிகமாக விலை சொல்கிறார்கள். எடுத்த எடுப்பிலேயே ரூ.20,000, ரூ.30,000 என்றுதான் ஆரம்பிக்கிறார்கள். அதனால்தான் இந்த முறை கொஞ்சம் யோசித்து இப்படி ஒரு ஐடியாவைப் பிடித்தோம். மும்பை அணி தங்கியிருக்கும் ஹோட்டலிலேயே அறையை புக் செய்தோம். இங்கே ஒரு நாளைக்கு 15,000 ரூபாய் கேட்கிறார்கள்.
மூன்று நண்பர்கள் ஒன்றாக வந்திருக்கிறோம். மூன்று பேரும் பில்லை ஷேர் செய்தாலும் ஆளுக்கு 5000 ரூபாய்தான் வருகிறது. வீரர்களையும் நெருக்கமாகப் பார்க்கமுடிகிறது. ஹர்திக் பாண்ட்யாவை சந்தித்து வாழ்த்து சொல்லி பேசினோம். எங்களை மதித்து நின்று போட்டோவுக்கு போஸ் கொடுத்து ஜாலியாகப் பேசிவிட்டு சென்றார். ரோஹித், திலக் வர்மா என எல்லா வீரர்களுமே சகஜமாக இயல்பாக இருக்கிறார்கள். மைதானத்தில் தூரத்தில் பார்க்க அத்தனை ஆயிரம் ரூபாய் கொடுப்பதற்கு இப்படி வீரர்களை சந்திப்பது எவ்வளவோ மேல். இது ஒரு வித்தியாசமான அனுபவமாகவும் இருக்கிறது.' என்கின்றனர்.

அநியாய விலை வைத்து விற்கப்படும் டிக்கெட்டுகளால்தான் ரசிகர்கள் இப்படி விதவிதமாக யோசிக்கத் தொடங்குகிறார்கள். கொஞ்சம் பார்த்து பண்ணுங்க சேப்பாக்!