'திரும்ப போய்விடுங்கள்' - வெளிநாட்டு மாணவர்களுக்கு அமெரிக்கா எச்சரிக்கை - காரணம்...
Riyan Parag : ரியான் பராக்கின் காலில் விழுந்த ரசிகர் - ட்ரோல் செய்வது நியாயமா?
'காலில் விழுந்த ரசிகர்!'
ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கிடையேயான போட்டி கவுஹாத்தியில் நடந்திருந்தது. கொல்கத்தா அணி இந்தப் போட்டியை வென்றிருந்தது. இதில் எந்தப் பிரச்சனையும் இல்லை.

ஆனால், போட்டியின் இடையே மைதானத்துக்குள் ஓடி வந்து ராஜஸ்தான் அணியின் கேப்டன் ரியான் பராக் காலில் ரசிகர் ஒருவர் விழுந்தார். இந்த சம்பவம் இப்போது இணையத்தில் ட்ரோல் ஆகி வருகிறது. தோனி, கோலி, ரோஹித் காலில் விழுந்த ரசிகர்களைப் பார்த்திருக்கிறோம். ரியான் பராக்கின் காலில் விழும் ரசிகரை இப்போதுதான் முதல் முறையாகப் பார்க்கிறோம் என நக்கலாக கமென்ட் செய்து வருகின்றனர். ஒருவர் காலில் மற்றொரு விழுவது சுயமாரிதை சார்ந்து சரியா என்கிற பார்வையிலான விவதாங்கள் அல்ல அவை.
ரசிகர்கள் ஓடி வந்து காலில் விழும் அளவுக்கு ரியான் பராக் என்ன பெரிய ஆளா என்பதுதான் சமூகவலைதள ட்ரோல்களின் அடிப்படையாக இருக்கிறது. ஆனால், அந்த மனநிலை தவறு. ரசிகர் காலில் விழுந்ததற்காக ரியான் பராக்கை ட்ரோல் செய்பவர்கள் அவர் சார்ந்த பல விஷயங்களை மறந்துவிடுகின்றனர். அதெல்லாம் தெரிந்தால் நிச்சயமாக ரியான் பராக்கை ட்ரோல் செய்யவே மாட்டார்கள்.

'அசாம் மாநிலத்தின் பின்னணி!'
போட்டி அசாம் மாநிலத்தின் கவுஹாத்தியில் நடந்தது. ரியான் பராக் அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர். அதுமட்டுமில்லை அசாம் மாநிலத்திலிருந்து இந்திய அணிக்காக கிரிக்கெட் ஆடிய முதல் வீரர். பலவிதங்களில் இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்கள் பின் தங்கியே இருக்கின்றன. அந்த மாநிலங்களுக்கு மற்ற மாநிலங்களைப்போல கவனமும் கொடுக்கப்படுவதில்லை. அசாமும் இதற்கு விதிவிலக்கல்ல. அரசியலைத் தாண்டி கிரிக்கெட்டிலும் அசாம் பின்தங்கிய நிலையிலேயே இருக்கிறது.

அந்த மாநிலத்தில் முறையற்ற வானிலையால் அங்கே கிரிக்கெட் ஆடுவதற்கான ஏதுவான சூழலே இருக்காது. மேலும், ஒரு விளையாட்டை இளைஞர்கள் பற்றிக் கொண்டு ஆடுவதற்கான உட்கட்டமைப்பு வசதிகள் இருக்காது. பல மணி நேரங்களுக்குப் பயணம்செய்தே பயிற்சி மையங்களுக்கு செல்லும் நிலை இன்னமும் இருக்கிறது. மொத்தத்தில் சொல்லப்போனால் மும்பை, பெங்களூரு, சென்னை போன்ற நகரங்களைவிட பல ஆண்டுகள் பின்தங்கிய நிலையில் அசாம் இருக்கிறது.
'ரியான் பராக் அசாமைப் பற்றி!'
'அசாமிலிருந்து கிரிக்கெட்டில் முன்னேறியவர்கள் என ஒரு வழிகாட்டியே எனக்கு இல்லை. என்னுடைய அப்பா கிரிக்கெட்டர்தான். ஆனால், இந்திய அணிக்காக ஆட வேண்டும் என்கிற ஆசையோ கனவோ அவருக்கு உண்டானதே இல்லையாம். அப்படி கனவு உண்டாகும் அளவுக்கு இங்கே உட்கட்டமைப்பு வசதிகளும் இல்லை. எல்லாவற்றுக்கும் கவுஹாத்திக்கு மட்டும்தான் வர வேண்டும்.

நீங்களே யோசித்துப் பாருங்கள். தினமும் 3-4 மணி நேரம் பயணம் செய்து பயிற்சி மையங்களுக்குச் செல்லவேண்டிய சூழல் இருந்தால் எப்படி நிறைய வீரர்கள் இங்கிருந்து வருவார்கள். மும்பையில் ஒரு சிறுவன் கிரிக்கெட் ஆட விரும்பினால் எங்கே செல்ல வேண்டும் என்ன செய்ய வேண்டும் என இயல்பாகவே தெரிந்துவிடும். ஆனால், அசாமில் நிலைமை அப்படியில்லை. இங்கே மக்களின் வாழ்க்கையே ரொம்பவே எளிமையாக இருக்கும். அசாமில் அவை அத்தனை எளிதான விஷயமல்ல.
இதற்குள் விளையாட்டுக்கான இடமே இல்லை. அடித்து பிடித்து மேலே வந்தாலும் மும்பை போன்ற பெருநகரவாசிகளுடன் போட்டி போட வேண்டும். மும்பைக்காரர் 3 சதம் அடித்தால் நீங்கள் 6 சதம் அடிக்க வேண்டும். அப்போதுதான் உங்களை கணக்கிலேயே எடுத்துக்கொள்வார்கள். இந்தச் சூழலிலிருந்து இப்போது நான் கொஞ்சம் மேலே ஏறி வந்திருக்கிறேன். எனக்கு பின்னால் வருபவர்களுக்கு என் மூலம் கொஞ்சம் வழித்தடம் கிடைத்திருக்கிறது என நம்புகிறேன்.' என்று ரியான் பராக் ஒரு பேட்டியில் பேசியிருப்பார்.
'ரியான் பராக்கின் வளர்ச்சி!'
அசாமில் கிரிக்கெட்டின் நிலைமை மட்டுமல்ல. ஒட்டுமொத்தமாக விளையாட்டின் நிலைமையே இதுதான். இந்தச் சூழலிலிருந்து முட்டி மோதி மேலே வந்துதான் மேரி கோம், மீராபாய் சானு, லவ்லினா போர்ஹோகெய்ன் போன்றோர் ஒலிம்பிக்ஸில் இந்தியாவுக்காக பதக்கம் வென்று கொடுத்து பெருமை சேர்த்துக் கொடுத்திருக்கின்றனர். அசாமிலிருந்து எதிர் நீச்சல் போட்டு வந்த கிரிக்கெட் முகம் ரியான் பராக். இளம் வயதிலேயே ராஜஸ்தான் அணியால் அவரின் திறமை கண்டறிப்பட்டு அணிக்குள் கொண்டு வரப்பட்டார்.
உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக ஆடி கடந்த ஆண்டில் இந்திய அணிக்கும் அறிமுகமானார். அசாமிலிருந்து இந்திய அணிக்காக ஆடிய முதல் கிரிக்கெட்டர் ரியான் பராக்தான். மேலும், ரியான் பராக் அவரின் வெற்றி வழி அசாம் மக்களின் கலாசாரத்துக்கு ஒரு வெளிச்சம் கொடுக்கிறார்
பெரும் வணிகம் கொண்ட ஐ.பி.எல் இல் அரைசதம் அடித்துவிட்டு அசாமிக்களின் பாரம்பரிய நடனத்தை மைதானத்திலேயே ஆடுகிறார். வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் அந்த மக்களின் வாழ்க்கை பற்றிப் பேசுகிறார். இதனால்தான் அசாம் மக்கள் உலக அரங்கில் தங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தங்களின் ஓர் அடையாளமாக ரியான் பராக்கைப் பார்க்கிறார்கள். அவர்களுக்கு ரியான் பராக் ஒரு நம்பிக்கை. அதனால்தான் அசாமின் கவுஹாத்தியில் மைதானத்துக்குள் ஓடி வந்து ரசிகர் ஒருவர் ரியான் பராக்கின் காலில் விழுகிறார்.
'ரியான் பராக் பெரிய ஆள்தான்!'
ஒருவர் நாயக பிம்பமாக முன் நிறுத்தப்படுவது, பகுத்தறிவற்று காலில் விழுவது போன்ற இந்த ரசிக மனநிலையைப் பற்றியெல்லாம் தனியாகப் பேச வேண்டும். ஆனால், இந்த நிகழ்வை வைத்துக்கொண்டு ரியான் பராக்கெல்லாம் ஒரு ஆளா என ட்ரோல் செய்கிறார்களே. அது தவறு. அசாமிகளுக்கு ரியான் பராக் பெரிய ஆள்தான். அவர்களுக்கு பராக் ஒரு நம்பிக்கை, ஓர் அடையாளம். அம்மக்களுக்கு ஒரு பெருங்கனவுக்கு வித்திட்ட ஒரு இளம் நாயகன்தான்