TV Update: தீ மிதித்த CWC புகழ்; சங்கத் தேர்தலில் சீரியல் நடிகர் பலே ப்ளான்; குடும்பக் கதைக்கு நோ!
படம் ரிலீசாகட்டும் தாயே..
'கலக்கப் போவது யாரு', 'குக்கு வித் கோமாளி' போன்ற நிகழ்ச்சிகளின் மூலம் பிரபலமான புகழ், சொந்த ஊர் அம்மன் கோவிலில் தீ மிதித்து வழிபாடு செய்துள்ளார்.
டிவி மூலம் பிரபலமடைந்த புகழ் பிறகு திரைப்படங்களில் சிறு சிறு கேரக்டர்களில் நடித்துக் கவனம் ஈர்த்தார். 'அயோத்தி' முதலான சில படங்கள் இவருக்கு நல்ல பெயரைப் பெற்றுத் தந்தன.
தொடர்ந்து ஹீரோவாக களம் இறங்கினார். 'மிஸ்டர் ஸூ கீப்பர்' இவர் ஹீரோவாக நடித்திருக்கும் படம். படத்தின் ஆடியோ வெளியாகி ஓராண்டுக்கும் மேலாகி விட்டது.
கடந்த ஜூன் மாதமே படம் ரிலீஸாகுமென அறிவிக்கப்பட்டது. ஆனால் என்ன காரணமோ தெரியவில்லை, குறிப்பிட்ட அந்தத் தேதியில் படம் ரிலீஸ் ஆகவில்லை.
தற்போது ஆகஸ்ட் முதல் தேதியில் படம் வெளியாகுமென அறிவித்திருக்கிறார்கள்.
படத்தின் ரிலீஸ் தள்ளிக் கொண்டே போன சூழலில் சொந்த ஊர் அம்மன் கோவிலில் தீ மிதித்துத் திரும்பியிருக்கிறார் புகழ்.
குடும்பக் கதைக்கு நோ... காரணம் என்ன?
விஜய் டிவியில் ஒளிபரப்புக்குத் தயாரான தொடர் ஒன்று ஆரம்பக் கட்டத்திலேயே நின்று போனதாகச் சொல்கிறார்கள்.
சினிமாவில் 'வரவு எட்டனா செலவு பத்தனா', 'கூடி வாழ்ந்தால் கோடி நன்மை' உள்ளிட்ட பல படங்களை எடுத்தவர் வி.சேகர். குடும்பக் கதைகளையே படமாக்குவதால் இவரது படங்களுக்கெனத் தனி ரசிகர் கூட்டம் உண்டு. இவர் ஏற்கனவே சில சீரியல்களைத் தயாரித்திருக்கிறார்.

இந்த நிலையில் விஜய் டிவியில் இவரது கதை ஒன்றை சீரியலாக்க முடிவு செய்தார்களாம்.
ஆகஸ்ட் முதல் வாரத்தில் முடிவடைய இருக்கிற 'பாக்கியலட்சுமி' தொடருக்குப் பதில் அந்த ஸ்லாட்டில் இந்தத் தொடர்தான் ஒளிபரப்பாகுமெனச் சொல்லப்பட்டிருக்கிறது. நடிகர்கள் பலரிடமும் தொடருக்காகப் பேசி ஷூட்டிக் தேதியெல்லாம் கூடக் குறிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் கடைசி நேரத்தில் என்ன நடந்ததோ தெரியவில்லை, புராஜெக்ட் ட்ராப் ஆகியிருக்கிறது.
ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும்..
சின்னத்திரை நடிகர் சங்கத்துக்கு ஆகஸ்ட் 10ம் தேதி தேர்தல் நடக்கவிருக்கிறது. இந்தத் தேர்தலில் நிரோஷா, தினேஷ், பரத் என மூன்று பேர் தலைமையில் மூன்று அணிகள் போட்டியிடுகின்றன. இவர்கள் தவிர ஆர்த்தியும் அவரது கணவர் கணேஷ்கரும் சுயேட்சையாக தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவிக்குப் போட்டியிடுகின்றனர்.
வேட்பாளர்கள் பலரும் டிவி நடிகர் நடிகைகளிடம் ஓட்டு கேட்டு வரும் சூழலில் இந்தத் தேர்தல் தொடர்பாக சின்னத்திரை வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படும் ஒரு தகவல் சுவாரஸ்யமானதாக இருக்கிறது. அது நடிகர் மெட்டி ஒலி ராஜ்காந்தைப் பற்றியது.
அதாவது ராஜ்காந்த் கடந்த தேர்தலின் போது தோல்வியடைந்த ரவி வர்மா அணியில் போட்டியிட்டு வெற்றி பெற்று செயற்குழுவுக்குள் வந்தவர். தற்போது கடந்த முறை வென்ற நடிகர் பரத் அணியில் சேர்ந்து துணைத் தலைவர் பதவிக்குப் போட்டியிடுகிறார். அதாவது தற்போது பரத் அணி வெல்ல வாய்ப்பிருப்பதாக நினைத்து அதில் சேர்ந்திருக்கிறார் என்கிறார்கள்.
'இது என்னங்க அதிசயம், கடந்த அஞ்சாறு தேர்தல்களை எடுத்துப் பார்த்தீங்கன்னா தெரியும், அவர் எல்லா நிர்வாகத்துலயுமே பொறுப்பில் இருப்பார். அதாவது யார் தோத்தாலும் ஜெயித்தாலும் அவர் நிர்வாகக் குழுவுல இருந்துட்டே இருக்கார். இருக்கிற இடம் தோக்கற மாதிரி தெரிஞ்சா ஜெயிக்கிற இடத்துக்கு இடம் பெயர்ந்திடுவார். இது எப்படி இருக்கு' என்கின்றனர்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...