TVK : 'உதயநிதி ஒரு சோட்டா பச்சா; திமுக ஒரு ஸ்டிக்கர் அரசு' - தவெக கொ.ப.செ ராஜ் மோகன்
'தவெக பத்திரிகையாளர் சந்திப்பு!'
அண்ணா பல்கலைக்கழக மாணவி வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் ஞானசேகரன் என்பவர் சென்னை மகளிர் நீதிமன்றத்தால் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் தவெக சார்பில் அக்கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் ராஜ் மோகன் பத்திரிகையாளர்களைச் சந்தித்திருந்தார்.

'ஸ்டிக்கர் திமுக அரசு!'
ராஜ் மோகன் பேசியதாவது, 'அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் கிடைத்திருக்கும் தீர்ப்பு நீதித்துறைக்கும் அந்தப் பெண்ணுக்கும் கிடைத்திருக்கும் வெற்றி. அதன் மேல் திமுக அரசு ஸ்டிக்கர் ஒட்டிக் கொண்டிருக்கிறது. இந்த அரசின் காவல்துறைதானே பாதிக்கப்பட்ட மாணவியின் பெயரையும் விவரங்களையும் வெளியிட்டது? ஒரே ஒரு குற்றவாளிதான் இந்த சம்பவத்தில் ஈடுபட்டிருக்கிறார் என எப்படி முடிவுக்கு வந்தீர்கள்?
'பாதிக்கப்பட்டவர்களே குற்றவாளிகளாக சித்தரிப்பு!'
இந்தத் தீர்ப்பில் திமுக அரசுக்கும் முதல்வர் ஸ்டாலினுக்கும் துளி கூட பங்கில்லை. வியாசர்பாடி தீ விபத்து சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்யச் சென்ற தவெக பெண்களை காவல்துறையினர் எட்டி உதைத்திருக்கின்றனர். இது மலிவான அரசியல் இல்லையா? வேங்கை வயல் முதல் வியாசர்பாடி வரை பாதிக்கப்பட்ட மக்களையே இவர்கள் குற்றவாளிகளாக சித்தரித்து வருகிறார்கள்.

எல்லோருமே ஒடுக்கப்பட்ட மக்கள். ஒடுக்கப்பட்ட மக்கள் என்ன பாவம் செய்தார்கள்? திமுகவை வீழ்த்த மக்கள் சக்தியோடுதான் கூட்டணி வைப்போம். கடந்த கால படிப்பினைகளை மறந்துவிட்டு பாசிசத்துடன் கூட்டணி சேர்ந்து நிற்கும் யாருடனும் நாங்கள் கூட்டணி வைப்பதில்லை. இதில் தெளிவாக இருக்கிறோம். ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு என்கிற கொள்கை முழக்கத்தை ஏற்று வருகிற திமுக, பாஜக அல்லாத எந்தக் கட்சியுடனும் கூட்டணி வைப்போம்.
ஒன்றரை கோடி புதிய வாக்காளர்கள் 2026 இல் வாக்களிக்க இருக்கிறார்கள். ஒவ்வொரு திமுகவினர் வீட்டிலும் ஒரு தவெக ஓட்டு இருக்கிறது. பெரும் மக்கள் சக்தியுடன் 2026 இல் வெல்வோம். 2021 இல் மக்கள் நீதி மய்யத்தை பாஜகவின் B டீம் என தயாநிதி மாறன் விமர்சித்தார். இன்றைக்கு அந்த ம.நீ.மவுக்கு மாநிலங்களவை சீட்டை கொடுத்திருக்கிறார்கள். ஆக, திமுகவும் ஆர்.எஸ்.எஸூம் தான் உண்மையான கூட்டணியில் இருக்கிறார்கள். தமிழக அமைச்சர்கள் எங்களின் தலைவரை விமர்சிப்பது, அவர்களின் உதயநிதியை விமர்சிப்பதைப் போலவே இருக்கிறது.

'உதயநிதி சோட்டா பச்சா!'
எங்களின் தலைவர் பச்சா என்றால் உதயநிதி சோட்டா பச்சா. துரைமுருகன் மூத்தவர். கொஞ்சம் பக்குவமாக பேச வேண்டும். அனகாபுத்தூரில் உள்ள எளிய மக்களின் வீடுகளை இடிக்கிறீர்களே. அங்கிருக்கும் ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் அப்பார்ட்மென்ட்டை உங்களால் இடிக்க முடியுமா? ஒடுக்கப்பட்ட மக்கள் என்றாலே இந்த அரசு மாற்றாந்தாய் மனப்பாங்குடன்தான் அணுகுகிறது.' என்றார்