Virat Kohli : 'நான் இருந்திருந்தால் கோலியை விட்டிருக்கமாட்டேன்!' - ஆதங்கப்படும் ஸ்ரீகாந்த்
'ஓய்வு பெற்ற கோலி!'
இந்திய அணியின் சீனியர் வீரரான விராட் கோலி சமீபத்தில் டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தார். இன்னும் 2 ஆண்டுகளுக்கு கட்டாயம் ஆடுவார் என எதிர்பார்த்த நிலையில் அவரின் ஓய்வு அனைவருக்கும் அதிர்ச்சியைக் கொடுத்தது. இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் வீரரான தமிழகத்தைச் சேர்ந்த ஸ்ரீகாந்த், விராட் கோலியின் ஓய்வு பற்றி பேசியிருக்கிறார்.
'நான் இருந்திருந்தால் விட்டிருக்கமாட்டேன்!'
அவர் பேசியதாவது, ''நான் இந்திய அணியின் தேர்வுக்குழுவின் தலைவராக இருந்த போதுதான், 2010-11 காலக்கட்டத்தில் வெஸ்ட் இண்டீஸூக்கு எதிரான ஒரு தொடரில் கோலி டெஸ்ட்டில் அறிமுகமானார். அங்கே இருந்து ஆரம்பித்த கோலி இப்போது தனது பயணத்தை முடித்திருக்கிறார்.
நான் இந்த சமயத்தில் இந்திய அணியின் தேர்வுக்குழுத் தலைவராக இருந்திருந்தால் கோலியை விட்டிருக்கமாட்டேன். கில்லை டெஸ்ட் கேப்டன் என பேசிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், கில்லே இன்னமும் தன்னை டெஸ்ட்டில் நிலைப்படுத்திக் கொள்ளவில்லை. அவர் இல்லையேல் பும்ராவை கேப்டன் என்கிறார்கள். அவரால் காயமடையாமல் 5 போட்டிகளுக்கு தொடர்ந்து கேப்டனாக இருக்கமுடியுமா எனத் தெரியவில்லை.
இந்த மாதிரியான சூழலில் விராட்டை அழைத்து கேப்டன் பதவியை கொடுத்திருப்பேன். `ஒன்றிரண்டு ஆண்டுகள் இந்திய அணியை நன்றாக செட் செய்து கொடுத்துவிட்டு ஓய்வு பெறு' எனக்கூறியிருப்பேன். டெஸ்ட்டில் விராட்தான் உலகின் தலைசிறந்த கேப்டன். வெளிநாடுகளில் எவ்வளவு போட்டிகளை வென்றிருக்கிறார் என எடுத்துப்பாருங்கள்.' என்றார்.