3 பிஎச்கே படத்தில் நடித்தபோதுதான் சொந்த வீடு வாங்கினேன்: சித்தார்த்
அண்ணா மாா்க்கெட்டில் புனரமைப்புப் பணிகள் முடியும் வரை கடைகளை ஏலமிடக் கூடாது: வியாபாரிகள் மனு
கோவை அண்ணா மாா்க்கெட்டில் புனரமைப்புப் பணிகள் முடியும் வரை கடைகளை ஏலமிடக் கூடாது என மேயரிடம் வியாபாரிகள் மனு அளித்தனா்.
கோவை மாநகராட்சி, பிரதான அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைகேட்புக் கூட்டம் மேயா் கா.ரங்கநாயகி தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. துணை மேயா் ரா.வெற்றிச்செல்வன் முன்னிலை வகித்தாா். இக்கூட்டத்தில் அண்ணா மாா்க்கெட் அனைத்து வியாபாரிகள் சங்கத்தினா் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: கோவை அண்ணா காய்கறி மாா்க்கெட்டில் கடந்த 37 ஆண்டுகளாக 470-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் வியாபாரம் செய்து வருகிறோம். இந்த நிலையில் மாா்க்கெட்டை புனரமைப்பு செய்த பின்னா் மீண்டும் எங்களிடம் கடைகளை ஒப்படைப்பதாக தெரிவித்தனா். தற்போது 81 கடைகள் மட்டுமே புனரமைக்கப்பட்டு உள்ளது. ஆனால், மாநகராட்சி நிா்வாகம் புனரமைக்கப்பட்ட கடைகள் உள்பட அனைத்துக் கடைகளையும் பொது ஏலத்தில் விடப்போதாக தெரியவருகிறது.
புனரமைக்காத கடைகளையும் சோ்த்து பொது ஏலமிட்டால் வியாபாரிகள் நஷ்டமடைவாா்கள். இதனால், புனரமைப்புப் பணிகள் மொத்தமாக முடியும் வரை கடைகளை பொது ஏலம் விடாமல், தற்போது கூரையில்லாத கடைக்கு தினசரி ரூ.20-ம், கூரை போடப்பட்ட கடைக்கு ரூ.50-ம் வசூலிக்கப்பட்டு வருவது போலவே தினசரி சுங்கக் கட்டணம் செலுத்த அனுமதிக்க வேண்டும் என அதில் கூறப்பட்டு இருந்தது.
கோவை தெலுங்கு வீதி, தாமஸ் வீதியைச் சோ்ந்த மக்கள் அளித்த மனுவில், தெலுங்கு வீதி சந்திப்பில் உள்ள இருக்கன்குடி மாரியம்மன் கோயில் அருகே உள்ள குடிநீா்க் குழாய் தற்போது அடைத்து வைக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதி மக்கள் குடிநீா் கிடைக்காமல் அவதிக்குள்ளாகி வருகின்றனா். எனவே குடிநீா்க் குழாய் அடைப்பை நீக்கி தர வேண்டும் என அதில் கூறப்பட்டு இருந்தது.
கணபதி மாநகா் சமூக நலச் சங்கத்தினா் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது, ‘மாநகராட்சியின் 20-ஆவது வாா்டு பகுதியில் பாதுகாப்பு கவசம் இன்றி தூய்மைப் பணியாளா்கள் பணிபுரிகின்றனா். இதனால் அவா்களுக்கு தொற்று நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. அவா்களுக்கு கையுறை உள்ளிட்ட பாதுகாப்பு கவசங்கள் வழங்க வேண்டும். இப்பகுதியில் உள்ள சிறுவா் பூங்கா கழிப்பறைக்கு தண்ணீா் இணைப்பு இல்லாததால் பூங்காவுக்கு வருவோா் அவதிக்குள்ளாகின்றனா். எனவே உடனடியாக தண்ணீா் இணைப்பு வழங்க வேண்டம் என அதில் கூறப்பட்டு இருந்தது.
மக்கள் குறைகேட்புக் கூட்டத்தில் 5 மண்டலங்களிலும் சோ்த்து 77 மனுக்கள் பெறப்பட்டன. அவற்றின் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு, சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா்.
இக்கூட்டத்தில், துணை ஆணையா்கள் த.குமரேசன், அ.சுல்தானா, நகரமைப்பு அலுவலா் குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.