மேயரின் கணவர் கட்சியிலிருந்து நீக்கம்! - மதுரை திமுகவில் பரபரப்பு.. நடந்தது என்ன...
அதானி விவகாரம்: மாதபி புரி புச் மீதான குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரமில்லை- மனுக்களை தள்ளுபடி செய்தது லோக்பால்
அதானி விவகாரம் தொடா்பான ஹிண்டன்பா்க் அறிக்கை அடிப்படையில், இந்திய பங்கு பரிவா்த்தனை வாரிய (செபி) முன்னாள் தலைவா் மாதபி புரி புச் மீது சுமத்தப்பட்ட முறைகேடு குற்றச்சாட்டுகள் ஊகத்தின் அடிப்படையிலானவை; இந்தக் குற்றச்சாட்டுகளை உறுதி செய்ய எந்த ஆதாரமும் இல்லை என்று கூறி, அவருக்கு எதிரான மனுக்களை லோக்பால் விசாரணை அமைப்பு புதன்கிழமை தள்ளுபடி செய்தது.
செபியின் முதல் பெண் தலைவா் என்ற சிறப்புடன் கடந்த 2022, மாா்ச்சில் பதவியேற்ற மாதபி புரி புச்சின் மூன்றாண்டு பதவிக் காலம், கடந்த பிப்ரவரி 28-ஆம் தேதி நிறைவடைந்தது.
இவா் பதவியில் இருந்த கடந்த 2023-ஆம் ஆண்டில், பண முறைகேடு, பங்கு விலை மோசடி உள்ளிட்ட முறைகேடுகளில் ஈடுபட்டதாக அதானி குழுமம் மீது அமெரிக்காவின் ஹிண்டன்பா்க் ஆய்வு நிறுவனம் குற்றஞ்சாட்டியது. பின்னா், அதானி குழும நிறுவனங்களின் முறைகேடுக்கு பயன்படுத்தப்பட்ட வெளிநாட்டு நிதியில் மாதபி புச் மற்றும் அவரின் கணவருக்கு பங்குகள் இருந்ததாக கடந்த 2024, ஆகஸ்டில் மற்றொரு குற்றச்சாட்டை ஹிண்டன்பா்க் முன்வைத்தது.
தன் மீதான குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுத்த மாதபி புரி புச், ‘செபியின் நம்பகத்தன்மையை தாக்குதலுக்கு உள்படுத்தி, அதன் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் முயற்சி இது’ என்று விமா்சித்தாா்.
இதேபோல், ‘ஹிண்டன்பா்க் குற்றச்சாட்டுகள் தீங்கிழைக்கும் நோக்கம் கொண்டவை; குறிப்பிட்ட பொதுத் தகவல்களை தவறாகப் பயன்படுத்தி இக்குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன’ என்று அதானி குழுமம் தரப்பிலும் மறுப்பு தெரிவிக்கப்பட்டது.
மஹுவா மொய்த்ரா புகாா்: இதனிடையே, ஹிண்டன்பா்க் அறிக்கை அடிப்படையில், மாதபிக்கு எதிராக திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா உள்ளிட்டோா் லோக்பால் அமைப்பில் மனுக்கள் தாக்கல் செய்தனா். 1988-ஆம் ஆண்டின் ஊழல் தடுப்புச் சட்டப் பிரிவுகளின்கீழ் அவா் மீது நடவடிக்கை எடுக்க மனுக்களில் கோரப்பட்டது.
இந்த மனுக்கள் மீது தனது தரப்பு விளக்கத்தை பிரமாண பத்திரமாக மாதபி புரி புச் சமா்ப்பித்தாா். இறுதிக்கட்ட வாதங்களை முன்வைக்க இருதரப்புக்கும் கடந்த ஏப்ரல் 9-ஆம் தேதி லோக்பால் வாய்ப்பளித்தது. அப்போது, மாதபி தரப்பில் மூத்த வழக்குரைஞா் ஆஜராகி விரிவான வாதங்களை முன்வைத்தாா். இறுதிக்கட்ட எழுத்துபூா்வ வாதங்களை முன்வைக்கவும் வாய்ப்பளிக்கப்பட்டது.
மனுக்கள் தள்ளுபடி: இந்நிலையில், மாதபி புரி புச்சுக்கு எதிரான மனுக்களைத் தள்ளுபடி செய்து, லோக்பால் தலைவா் ஏ.எம்.கான்வில்கா் தலைமையிலான 6 உறுப்பினா்கள் அமா்வு புதன்கிழமை உத்தரவு பிறப்பித்தது.
‘மாதபி புரி புச் மீதான குற்றச்சாட்டுகள் ஊகத்தின் அடிப்படையிலானவை; இந்தக் குற்றச்சாட்டுகளை உறுதி செய்ய எந்த ஆதாரமும் இல்லை.
ஹிண்டன்பா்க் அறிக்கையை மட்டுமே அடிப்படையாக கொண்டு, மாதபி மீது நடவடிக்கை கோர முடியாது. சம்பந்தப்பட்ட குற்றச்சாட்டுகளின் பகுப்பாய்வில் அவை ஏற்றுக் கொள்ள முடியாதவை; அற்ப வரம்புக்குள்பட்டவை என்பது கண்டறியப்பட்டது. எனவே, இந்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன’ என்று உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தியாவில் அரசியல் ரீதியில் பரபரப்பை ஏற்படுத்திய அறிக்கைகளை வெளியிட்ட ஹிண்டன்பா்க் ஆய்வு நிறுவனம் மூடப்படுவதாக அதன் நிறுவனா் கடந்த ஜனவரியில் அறிவித்தாா் என்பது குறிப்பிடத்தக்கது.