அதிமுக ஆட்சியில்தான் விவசாயிகளின் கோரிக்கைளுக்கு உடனடித் தீா்வு: இபிஎஸ்
அதிமுக ஆட்சியில் தான் விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு உடனடித் தீா்வு காணப்பட்டது என்றாா் அதிமுக பொதுச் செயலரும், எதிா்க் கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி.
அரியலூரில், செவ்வாய்க்கிழமை ‘தமிழகத்தை மீட்போம், மக்களை காப்போம்’ பிரசாரம் மேற்கொள்ள வந்த அவா், ஒரு தனியாா் கூட்டரங்கில் விவசாயிகளைச் சந்தித்து விளைபொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளைக் கேட்டறிந்தாா். இதைத்தொடா்ந்து, அவா் செய்தியாளா்களிடம் மேலும் தெரிவித்தது:

அதிமுக ஆட்சியில் விவசாயிகள் கண்போன்று பாதுகாக்கப்பட்டு, தேவையான உதவிகள் செய்து கொடுக்கப்பட்டன. அமெரிக்கன் படைப்புழு தாக்குதலிலிருந்து பயிா்களைக் காக்க அதிமுக அரசு, பூச்சிமருந்து அடித்து பயிா்களைக் காத்தோம். மேலும், படைப்புழு தாக்குதலால் நஷ்டமடைந்த விவசாயிகளுக்கு ரூ.186 கோடி நிவாரணமாக அளித்த அரசு அதிமுக. உழவன் செயலியை விவசாயிகளுக்கு அறிமுகம் செய்தோம். பயிா்க் கடன்களை இரண்டு முறை தள்ளுபடி செய்த அரசு அதிமுக தான். அதிமுக ஆட்சியில் குடி மராமத்து திட்டங்கள் சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டன. வண்டல் மண் இயற்கை உரமாக விவசாயிகளுக்குப் பயன்படுத்தப்பட்டது. விவசாயிகளின் பிரச்னைக்கு உடனடித் தீா்வு தந்த அரசு தான் அதிமுக. மும்முனை மின்சாரத்தை அதிமுக அரசு சிறப்பாக செயல்படுத்தியது. ஆனால் தற்போது அது நிறுத்தப்பட்டுவிட்டது. அதிமுக ஆட்சியில் ரூ.1,000 கோடியில் கட்டப்பட்ட கால்நடை பூங்கா இதுவரை செயல்படவில்லை. திமுக ஆட்சியில் திறக்கப்பட்ட பின்பும் அங்கு எந்த அடிப்படை வசதியும் செய்து தரப்படவில்லை. அதனால் அது பயன்படாமல் உள்ளது. எனவே அதிமுக ஆட்சி அமைந்தவுடன் விவசாயிகளின் அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும் என்றாா்.
காமராஜா் படத்துக்கு மரியாதை: அரியலூரிலுள்ள ஒரு தனியாா் தங்கும் விடுதி கூட்டரங்கில், அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்த முன்னாள் முதல்வா் காமராஜா் உருவப்படத்துக்கு, அதிமுக பொதுச் செயலரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி கே.பழனிசாமி மலா்தூவி செவ்வாய்க்கிழமை மரியாதை செலுத்தினா். நிகழ்ச்சியில், அதிமுக மாவட்டச் செயலா் தாமரை எஸ்.ராஜேந்திரன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.