அதிமுக தனிப்பெரும்பான்மை பெற்றாலும் கூட்டணி ஆட்சிதான்! - டிடிவி தினகரன்
தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிதான் அமையும் என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
தமிழ்நாட்டில் அடுத்தாண்டு சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுக - பாஜக கூட்டணி உருவாகியுள்ளது. எனினும் மத்திய அமைச்சர் அமித் ஷா மற்றும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் கருத்துகளால் கூட்டணியில் குழப்பம் நீடித்து வருகிறது.
கூட்டணி ஆட்சி என்று அமித் ஷா கூறிவரும் நிலையில், அதிமுக தனிப்பெரும்பான்மை பெற்று ஆட்சியமைக்கும் எனவும் ஆட்சியில் பங்குகொடுக்க நாங்கள் ஏமாளி அல்ல என இபிஎஸ் கூறி வருகிறார்.
இந்நிலையில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களுடன் பேசுகையில்,
"தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுகவை வீழ்த்த வேண்டும் என்ற நோக்கில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
2026 தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று கூட்டணி ஆட்சி அமைக்கும். தமிழ்நாட்டில் கூட்டு அமைச்சரவைதான் இருக்கும். ஆட்சி, அதிகாரத்தில் அனைத்துக் கட்சிகளும் பங்குபெறும்.
மத்தியில் பாஜக தனிப்பெரும்பான்மை பெற்றிருந்தும் கூட்டணி ஆட்சிதான் அமைந்தது. அதேபோல தமிழ்நாட்டிலும் அதிமுக தனிப்பெரும்பான்மை பெற்றாலும் கூட்டணி ஆட்சிதான் அமையும்.
திமுகவை வீழ்த்த கூட்டணியை பலப்படுத்தி வரும் மத்திய அமைச்சர் அமித் ஷா அதைத்தான் திரும்பத் திரும்பச் சொல்லி வருகிறார். முதல்வர் யார் என்பதை அமித் ஷாவிடம் கேட்பது சரியாக இருக்கும்" என்று கூறினார்.