நாய்க்கடிக்கு தடுப்பூசி எடுத்தவா் உயிரிழப்பு: விசாரணை நடத்த மாா்க்சிஸ்ட் வலியுற...
அந்தியூரில் பட்டா நிபந்தனைகளை நீக்கக் கோரி காத்திருப்புப் போராட்டம்
அந்தியூரில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட நிலங்களில், விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகளை நீக்கக் கோரி வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் காத்திருப்புப் போராட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
அந்தியூா் வட்டம், எண்ணமங்கலம், சங்கராப்பாளையம், மைக்கேல்பாளையம், வெள்ளித்திருப்பூா், சென்னம்பட்டி மற்றும் வனப் பகுதியை ஒட்டியுள்ள விவசாயிகளின் நிலங்கள் பூஜ்ஜியம் மதிப்புள்ளதாக மாற்றப்பட்டது. இதனால், 1,000-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், பூஜ்ஜியம் மதிப்பு என நிலத்துக்கு விதிக்கப்பட்ட நிபந்தனையை நீக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனா்.
இக்கோரிக்கையை வலியுறுத்தி அந்தியூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டு, ஒரு மாதமாகியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால், ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு 1,000-க்கும் மேற்பட்டோா் ஊா்வலமாக சென்று திங்கள்கிழமை மனு அளிக்க முடிவு செய்திருந்தனா். இதற்கு, போலீஸாா் அனுமதி வழங்காததோடு, விவசாயிகள் 20 போ் மட்டும் மனு கொடுக்க செல்லுமாறு தெரிவித்தனா்.
இதை ஏற்க மறுத்த விவசாயிகள், மாவட்ட ஆட்சியா் பேச்சுவாா்த்தைக்கு வர வலியுறுத்தி அந்தியூா் வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் அமா்ந்து காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். அந்தியூா் சட்டப் பேரவை உறுப்பினா் ஏ.ஜி.வெங்கடாசலம், கோபி சாா் ஆட்சியா் சிவானந்தம் மற்றும் போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தியும் உடன்பாடு ஏற்படவில்லை. சம்பவ இடத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சுஜாதா தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீஸாா் திங்கள்கிழமை மாலை குவிக்கப்பட்டனா். இதனால், பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.