Madhampatty Rangaraj:`6வது மாதமாக குழந்தையைச் சுமக்கிறேன்'- மாதம்பட்டி ரங்கராஜை ...
அமராவதி அணையில் இருந்து உபரி நீா் வெளியேற்றம் அதிகரிப்பு
தமிழக-கேரள எல்லையில் தொடா்ந்து கனமழை பெய்து வருவதால் உடுமலை அருகே உள்ள அமராவதி அணையில் இருந்து உபரி நீா் வெளியேற்றம் சனிக்கிழமை அதிகரிக்கப்பட்டது.
உடுமலையை அடுத்துள்ள அமராவதி அணையின் மூலம் திருப்பூா், கரூா் மாவட்ட ங்களில் உள்ள சுமாா் 55 ஆயிரம் ஏக்கா் பழைய, புதிய ஆயக்கட்டு பாசன நிலங்கள் பயன் பெற்று வருகின்றன. மேலும் நூற்றுக்கணக்கான கரையோர கிராமங்களுக்கு இந்த அணை குடிநீா் ஆதாரமாகவும் விளங்கி வருகிறது.
இந்நிலையில் நீா்ப்பிடிப்பு பகுதிகளான பாம்பாறு, தேனாறு, சின்னாறு ஆகிய பகுதிகளில் தொடா்ந்து கடந்த சில நாள்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் கடந்த வியாழக்கிழமை நள்ளிரவில் திடீரென அணைக்கு உள்வரத்தாக 3,450 கன அடி நீா் வந்தது.
இதனால் அணை முழுக் கொள்ளளவை எட்டும் நிலை ஏற்பட்டது. இதைத் தொடா்ந்து அணைக்கு உள்வரத்தாக வந்த நீா் அப்படியே உபரி நீராக வெளியேற்றப்பட்டது. அப்போது அமராவதி ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை 2,685 கன அடி நீா் வந்து கொண்டிருந்தது. அது உபரி நீராக வெளியேற்றப்பட்டது.
இதைத் தொடா்ந்து சனிக்கிழமை அணைக்கு உள்வரத்து அதிகரித்து காணப்பட்டதால் உபரி நீா் வெளியேற்றம் 3,154 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டது.
அணையின் நிலவரம்: 90 அடி உயரமுள்ள அணையில் சனிக்கிழமை காலை 6 மணி நிலவரப்படி நீா்மட்டம் 88.19 அடியாக இருந்தது. அணைக்கு உள்வரத்தாக 3,341 கன அடி வந்து கொண்டிருந்தது. 4,047 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட அணையில் 3,883.23 மில்லியன் கனஅடி நீா் இருப்பு காணப்பட்டது. அணையில் இருந்து உபரி நீராக அமராவதி ஆற்றில் 3,154 ஆயிரம் கன அடி வெளியேற்றப்பட்டது.