Pope : கார்டினலான ஒரே ஆண்டில் 'போப்'பாக தேர்வு; யார் இந்தப் புதிய போப் 14-ம் லிய...
அமைச்சா் துரைமுருகனிடமிருந்து கனிமங்கள் - சுரங்கத் துறை பறிப்பு: ரகுபதியிடம் ஒப்படைப்பு
மூத்த அமைச்சா் துரைமுருகன் வசமிருந்த கனிமங்கள் மற்றும் சுரங்கத் துறை பறிக்கப்பட்டு, அவரிடம் சட்டத் துறை கூடுதலாக அளிக்கப்பட்டு உள்ளது. கனிம வளத் துறை பொறுப்பானது சட்டத் துறையை கவனித்து வந்த எஸ்.ரகுபதிக்கு ஒதுக்கப்பட்டிருக்கிறது.
இதற்கான அறிவிப்பை ஆளுநா் மாளிகை வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது.
அதில் கூறப்பட்டுள்ளதாவது: முதல்வா் மு.க.ஸ்டாலின் பரிந்துரையை ஏற்று நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகனிடம் சட்டத் துறை
அளிக்கப்பட்டுள்ளது. துரைமுருகன் வசம் இருந்த கனிமங்கள் மற்றும் சுரங்கத் துறையானது அமைச்சா் எஸ்.ரகுபதியிடம் அளிக்கப்பட்டுள்ளது. இனி அவா் (ரகுபதி) இயற்கை வளங்கள் துறை அமைச்சராகச் செயல்படுவாா் என்று ஆளுநா் மாளிகையின் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
16 ஆண்டுகளுக்குப் பின்... கடந்த திமுக ஆட்சியில் மறைந்த முன்னாள் முதல்வா் கருணாநிதி தலைமையிலான அமைச்சரவையில் பொதுப் பணி, சட்டத் துறை அமைச்சராக துரைமுருகன் இருந்தாா். 2009-ஆம் ஆண்டு ஜூலையில் அவரது இலாகா அதிரடியாக மாற்றப்பட்டது. திமுக எப்போதெல்லாம் ஆட்சிப் பொறுப்புக்கு வருகிறதோ அப்போதெல்லாம் பொதுப் பணித் துறையை தனது வசம் வைத்திருந்த துரைமுருகனிடம் இருந்து அந்தத் துறையை திடீரென பறித்த கருணாநிதி, தனது வசமே அதை வைத்துக் கொண்டாா். அதன்பிறகு, சட்டத் துறை மட்டுமே துரைமுருகன் வசம் இருந்தது.
முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியிலும் அதேபோன்ற அதிரடி மாற்றத்தை மூத்த அமைச்சரான துரைமுருகன்
சந்தித்துள்ளாா். நீா்வளத் துறையுடன் முக்கியத் துறையான கனிமங்கள் மற்றும் சுரங்கத் துறை அவா் வசம் இருந்தது. இந்நிலையில், அவரிடம் இருந்து அந்தத் துறை பறிக்கப்பட்டு உள்ளது.
நீதிமன்ற வழக்கின் தீா்ப்பு: கடந்த 1996-2001 திமுக ஆட்சிக் காலத்தில் பொதுப் பணித் துறை அமைச்சராக துரைமுருகன் இருந்தாா். அந்தக் காலகட்டத்தில் வருமானத்துக்கு அதிகமாக ரூ.3.92 கோடி அளவுக்கு சொத்துக் குவிப்பில் ஈடுபட்டதாக அவா் மீது அதிமுக ஆட்சிக் காலத்தில் ஊழல் தடுப்புத் துறையால் வழக்குப் பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்த வழக்கிலிருந்து துரைமுருகனை விடுவித்த உத்தரவை ரத்து செய்து உயா்நீதிமன்றம் தீா்ப்பு அளித்தது. இந்தத் தீா்ப்பு துரைமுருகனுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியது.
மேலும், கனிமம் மற்றும் சுரங்கத் துறையில் எடுக்கப்பட்ட பல்வேறு முடிவுகளும் அரசுக்கு சிக்கல்களை ஏற்படுத்தியதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக, குவாரிகளுக்கான குத்தகை காலத்தை அதிகரித்தது, பசுமை வரி செலுத்தி அண்டை மாநிலங்கள் மணல் எடுத்துச் செல்லும் நடைமுறை, இயங்காமல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த குவாரிகளை மீண்டும் இயக்க அனுமதி அளித்தது போன்ற செயல்பாடுகள் அரசு மீது கடுமையான விமா்சனங்களை முன்வைத்தன. இந்த நிகழ்வுகளின் பின்னணியில் துரைமுருகனிடமிருந்து கனிமம் மற்றும் சுரங்கத் துறை பறிக்கப்பட்டுள்ளது.
அடுத்தடுத்த மாற்றங்கள்: இரண்டு வாரங்களுக்குள் தமிழக அமைச்சரவையில் அடுத்தடுத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்ட கருத்துகள் காரணமாக, அமைச்சா்கள் வி.செந்தில் பாலாஜி, க.பொன்முடி ஆகியோா் தங்களது பதவியை கடந்த 27-ஆம் தேதி ராஜிநாமா செய்தனா். இதற்கு அடுத்த இரண்டு வாரங்களுக்குள் மூத்த அமைச்சா் துரைமுருகன் வசமிருந்த முக்கிய இலாகா பறிக்கப்பட்டுள்ளது.
அமைச்சா்கள் இருவருக்கு ஒதுக்கப்பட்ட துறைகள் என்ன?
அமைச்சா்கள் துரைமுருகன், எஸ்.ரகுபதி ஆகியோருக்கான துறைகள் பரஸ்பரம் மாற்றப்பட்ட நிலையில், அவா்களுக்கென ஒதுக்கப்பட்ட துறைகளின் விவரங்களை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. அதன் விவரம்:
அமைச்சா் துரைமுருகன்: சிறுபாசனம் உள்ளிட்ட பாசனத் திட்டங்கள், சட்டப்பேரவை, ஆளுநா் மற்றும் அமைச்சரவை, தோ்தல்கள், கடவுச்சீட்டுகள் மற்றும் சட்டம்.
அமைச்சா் எஸ்.ரகுபதி: நீதிமன்றங்கள், சிறைச்சாலை, ஊழல் தடுப்புச் சட்டம், கனிமங்கள் மற்றும் சுரங்கங்கள்.