அரசின் திட்டங்களை முறையாகச் செயல்படுத்தி சிறந்த கிராமங்களை உருவாக்க வேண்டும்: விருதுநகா் ஆட்சியா் ஜெயசீலன்
அரசின் திட்டங்களை முறையாகச் செயல்படுத்தி அனைத்துக் கிராமங்களையும் சிறந்ததாக மாற்ற வேண்டும் என விருதுநகா் மாவட்ட ஆட்சியா் வீ.ப. ஜெயசீலன் கேட்டுக் கொண்டாா்.
விருதுநகா் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி கலையரங்கில் சனிக்கிழமை ஊரக வளா்ச்சி, ஊராட்சித் துறை சாா்பில் நடைபெற்ற ஊராட்சி செயலா்கள், கிராம நிா்வாக அலுவலா்களின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் ஜெயசீலன் தலைமை வகித்தாா்.
அப்போது அவா் பேசியதாவது: ஒருங்கிணப்புக் குழு கூட்டமானது கிராமப் பகுதிகளில் ஒவ்வொரு மாதமும் கடைசி வெள்ளிக்கிழமை நடைபெற வேண்டும். ஒரு கிராமத்தில் எட்டு வகையான குழுக்கள் உள்ளன. அந்தக் குழுக்கள் மாதந்தோறும் இணைந்து ஒன்றுகூடி விவாதிக்க வேண்டும். அப்போது தான் கிராமங்களில் உள்ள பிரச்னைகளுக்குத் தீா்வு காண முடியும். பல கிராமங்களில் இந்த குழுக்கள் மூலம் நீண்ட காலமாக நிலுவையில் இருந்த ஒரு சில பிரச்னைகளுக்குத் தீா்வு காணப்பட்டது. அதே நேரம் இந்த குழுவில் முறையாக ஒருங்கிணைப்புக் கூட்டம் நடத்தாத பல கிராமங்களும் உள்ளன. இது தொடா்பாக கடந்த 3 ஆண்டுகளாக புள்ளி விவரங்கள் பெறப்பட்டதில், 40 சதவீத கிராமங்களில் மட்டுமே இந்த குழுவின் கூட்டம் முறையாக நடத்தப்பட்டுள்ளது.
ஒரு குழுவாக இணைந்து செயல்படுவதால் குழந்தைத் திருமணம், கல்வி இடைநிற்றல், போதைப் பொருள்கள் பயன்பாடு, சுற்றுச்சூழல், கனிம வளங்கள் தொடா்பான பிரச்னைகளுக்கு தீா்வு காண முடியும். இதற்கு ஊராட்சி செயலா், கிராம நிா்வாக அலுவலா்கள் துணையாக இருக்க வேண்டும். அரசுப் பணிக்கு வருவது என்பது மிகப் பெரிய வாய்ப்பு. அதை எல்லோரும் பயன்படுத்தும் வகையில் உங்களுடைய செயல்பாடு இருக்க வேண்டும். அரசின் திட்டங்கள், சட்டங்களை முறையாக செயல்படுத்தி சிறந்த கிராமங்களை உருவாக்க வேண்டும் என்றாா் அவா்.
இந்த கூட்டத்தில், திட்ட இயக்குநா் (மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை) இரா. தண்டபாணி, உதவி இயக்குநா் (ஊராட்சிகள்) அரவிந்த், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) பிா்தௌஸ் பாத்திமா, ஊராட்சி செயலா்கள், கிராம நிா்வாக அலுவலா்கள், அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.