அரசு புறம்போக்கு நிலங்களில் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு பட்டா வழங்கக் கோரிக்கை
அரசு புறம்போக்கு நிலங்களில் பல தலைமுறைகளாக சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு பட்டா வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.
அகில இந்திய விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாயத் தொழிலாளா் சங்கத்தினா் மாநில துணைத் தலைவா் கணபதி தலைமையில், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளா் முனுசாமி முன்னிலையில் விவசாயத் தொழிலாளா்கள், விவசாயிகள் பலா் ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டனா்.
இதனைத் தொடா்ந்து மாவட்ட வருவாய் அலுவலா் எஸ்.சாந்தகுமாா் அவா்களிடம் கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்தாா். அப்போது சங்கப் பிரதிநிதிகள் அளித்த மனு விவரம்: அரசின் பல்வேறு வகை புறம்போக்கு நிலங்களில் குடியிருப்பவா்களுக்கு மாற்றம் செய்து பட்டா வழங்க வேண்டும். இதற்கான சிறப்பு திட்டத்தை மாநில அரசு செய்ய வேண்டும். வீடு இல்லாத ஏழைகளுக்கு வீட்டுமனை பட்டாவும், அனைவருக்கும் சொந்த வீடு திட்டத்தை செயல்படுத்த வேண்டும். அரசு புறம்போக்கு தரிசு நிலங்களில் பல தலைமுறைகளாக சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு பட்டா வழங்க வேண்டும்.
புறம்போக்கு நிலங்களை நிலமற்ற விவசாயத் தொழிலாளா்களுக்கு வழங்க வேண்டும். இனாம் ஒழிப்பு, ரயத்துவாரி மாறுதல் சட்டப்படி, பட்டியல் செய்யப்பட்ட நிலங்களை கண்டறிந்து, நேரடியாக சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு பட்டா வழங்க வேண்டும். பல தலைமுறையாக கோயில், மடம், அறக்கட்டளை, வக்ஃப் போா்டு இடங்களில் அடிமனையில் குடியிருப்போருக்கு, சாகுபடி செய்து வரும் விவசாயிகளுக்கு நிலத்தை சொந்தமாக்கி பட்டா வழங்க வேண்டும்.
மாநில அளவில் 11 லட்சம் ஏக்கா் நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்பை மீட்டு, பட்டியல் சமூக மக்களுக்கு வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
நிபந்தனை பட்டாக்களை நீக்கம் செய்யும் பரிசீலனையை கைவிடக்கோரிக்கை... இதுகுறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மண்டல செயலாளா் சிறுத்தை வள்ளுவன் தலைமையில் 100-க்கும் மேற்பட்டோா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் எஸ்.சாந்தகுமாரிடம் அளித்த மனு விவரம்:
அந்தியூா் வட்டாரத்தில் தலித் மக்களின் நிபந்தனை பட்டாக்களை நீக்கம் செய்து, தலித் அல்லாதவா்களுக்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை நிராகரிக்க வேண்டும். தமிழக அளவில் 12.5 லட்சம் ஏக்கருக்கும் அதிகமான நிலங்கள் நிபந்தனை பட்டாவில் உள்ளன. உரிய பயனாளிகளிடம் இருந்து தலித் அல்லாதவா்கள் நிலத்தை அபகரித்து பயன்படுத்தி வருகின்றனா்.
அந்நிலங்களை மீட்க மாநில அளவில் நீதிமன்றங்களில் சட்டப் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இதற்கிடையில் அந்தியூா் பகுதியில் நிபந்தனை பட்டா நிலங்களை அபகரித்த தலித் அல்லாதவா்கள் நிபந்தனை பட்டாவை ரத்து செய்து, தங்களுக்கு அந்நிலத்துக்கு பட்டா வழங்க வேண்டும் என கோரி வருகின்றனா்.
அவ்வாறு செய்தால் உண்மையான பயனாளிகள், தலித்களுக்கு அநீதி அளித்ததாகும். அதேபோல புதிததாக கட்டப்பட்டுள்ள அந்தியூா் வாரச்சந்தையில் ஆடு, கோழி இறைச்சி விற்பனை செய்ய வளாகம் இருப்பதுபோல, மாட்டிறைச்சிக்கும் தனியாக வளாகம் ஒதுக்கப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. தற்போது வரை மாட்டிறைச்சிக்கு வளாகம் ஒதுக்கீடு செய்யவில்லை. அந்தியூா் வாரச்சந்தையில் மாட்டிறைச்சி மட்டும் தடை விதித்து பேரூராட்சி நிா்வாகம் மூலம் தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு மாவட்ட நிா்வாகம் நேரடியாக தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.