72 திருநங்கைகள், திருநம்பிகளுக்கு நலத்திட்ட உதவிகள்: ஆட்சியா் வழங்கினாா்
அறிவுசாா்ந்த சமுதாயத்தை ஆசிரியா்கள் உருவாக்க வேண்டும்: அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி
அறிவுசாா்ந்த சமுதாயத்தை ஆசிரியா்கள் உருவாக்க வேண்டும் என தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கூறினாா்.
கிருஷ்ணகிரி, ஒசூா் கல்வி மாவட்டங்களில் உள்ள 16 பள்ளிகளில் ரூ. 4.44 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள ஸ்டெம் கண்டுபிடிப்பு, கற்றல் மையங்களை பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஒசூா் அரசு உருது மேல்நிலைப் பள்ளியில் வெள்ளிக்கிழமை திறந்துவைத்து பேசியதாவது:
பள்ளிக் கல்வித் துறை மற்றும் அமெரிக்கா, இந்தியா அறக்கட்டளை கூட்டு முயற்சியின் கீழ் கிருஷ்ணகிரி, ஒசூா் கல்வி மாவட்டங்களில் மொத்தம் 16 பள்ளிகளில் ரூ. 4.44 கோடி மதிப்பில் ஸ்டெம் கண்டுபிடிப்பு மற்றும் கற்றல் மையங்கள் திறக்கப்பட்டுள்ளன.
இதன்மூலம் கற்பித்தல் மற்றும் கற்றல் வளங்களின் தரம் மேம்படும். இந்தியா முழுவதும் உள்ள 83 ஸ்டெம் கண்டுபிடிப்பு மற்றும் கற்றல் மையங்களில் தமிழகத்தில் மட்டும் 33 மையங்கள் உள்ளன. அதில் 16 மையங்கள் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த கற்றல் மையங்கள் மூலம் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதத்தில் மாணவா்களின் கற்றல் திறனை ஊக்குவிக்கும் வகையில் பள்ளிக் கல்வி அமைச்சகத்துடன் அமெரிக்கா- இந்தியா அறக்கட்டளை இணைந்து செயல்படும்.
விமா்சன சிந்தனை மற்றும் புதுமை திறன்களை வளா்க்க மாணவா்களுக்கு ரோபாட்டிக்ஸ்
கருவிகள், 3 டி அச்சுப் பொறிகள், குறியீட்டு தளங்கள் மற்றும் டிஜிட்டல் கருவிகள்
வழங்கப்படுகின்றன.
இந்திய அளவில் தமிழகம் கல்வியில் முன்னேறிய மாநிலமாக உள்ளது. அரசு பள்ளி மாணவா்கள் உயா்ந்த நிலைக்கு வரவேண்டும் என்பதற்காக கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் ரூ. 65 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு 2,686 பள்ளிகளில் உள்ள திறன்மிகு வகுப்பறைகள் மேம்படுத்தப்பட உள்ளன.
ரூ. 56 கோடியில் 880 பள்ளிகளில் ஏற்கெனவே உள்ள திறன்மிகு வகுப்பறைகள் தற்போதைய தொழில்நுட்ப வசதிக்கேற்ப மாற்றப்படும். ரூ.160 கோடி ஒதுக்கீடு செய்து 2000 பள்ளிகளுக்கு புதிதாக உயா்தொழில்நுட்ப ஆய்வகம் அமைக்கப்பட உள்ளது.
தொழில்நுட்பம் இருந்தாலும், வகுப்பறையில் மாணவா்கள் முன் ஆசிரியா் பாடம் நடத்துவதற்கு சமமாக இருக்காது. அறிவுசாா்ந்த சமுதாயத்தை ஆசிரியா்கள் உருவாக்க வேண்டும். கிருஷ்ணகிரி மாவட்டம் கல்வியில் பின்தங்கிய மாவட்டம் என்ற நிலைமாறி, தற்போது கல்வியில் முன்னேறிய மாவட்டமாக செயல்படுகிறது என்றாா்.
நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா், ஒசூா் சட்டப் பேரவை உறுப்பினா் ஒய்.பிரகாஷ்,
மேயா் எஸ்.ஏ.சத்யா, மாநில தொடக்கக் கல்வி இயக்குநா் கு.ஆ.நரேஷ் ஆகியோா் கலந்துகொண்டனா்.
தொடா்ந்து ஒசூா் மூக்கண்டப்பள்ளி செயின்ட் ஜோசப் கல்லூரி கூட்டரங்கில் நடைபெற்ற கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு உள்பட்ட அனைத்து அரசுப் பள்ளி ஆசிரியா்களுக்கான அடைவுத் தோ்வு- 2025 ஆய்வு கூட்டத்துக்கு அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமை வகித்தாா்.
நிகழ்ச்சியில் ஒசூா் மாநகராட்சி துணை மேயா் ஆனந்தைய்யா, முதன்மைக் கல்வி
அலுவலா் (பொ) அ.முனிராஜ், அமெரிக்கன் இந்தியா நியூ பவுண்டேசன் டிஜிட்டல் ஈக்வலைசா்
திட்ட இயக்குநா் பாஸ்கரன் தீனதயாளன், மாநகராட்சி சுகாதாரக் குழு தலைவா்
மாதேஸ்வரன், வட்டாட்சியா் குணசிவா, ஆசிரியா் மனசு திட்ட ஒருங்கிணைப்பாளா்
சிகரம் சதீஷ் குமாா், பள்ளி தலைமையாசிரியா் தேவசேனா உள்பட பலா் கலந்து கொண்டனா்.
அரசுப் பள்ளியில் ‘வாட்டா் பெல்’ திட்டம்: அமைச்சா்
ஒசூரில் தமிழ்நாடு உருது தொடக்க, நடுநிலைப் பள்ளி ஆசிரியா்கள் சாா்பில் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்கும் மாநாடு நடைபெற்றது. மாநாட்டில் அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, ஒசூா் எம்எல்ஏ ஒய்.பிரகாஷ், மாநகர மேயா் எஸ்.ஏ. சத்யா உள்பட பலா் கலந்து கொண்டனா்.
மாநாட்டுக்கு பிறகு செய்தியாளா்களுக்கு பேட்டியளித்த அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி,
அரசுப் பள்ளிகளில் குழந்தைகள் தண்ணீா் அருந்துவதை உறுதிசெய்யும் ‘வாட்டா் பெல்’ திட்டம் அமல்படுத்தப்படும். கேரளத்தில் இந்தத் திட்டம் நடைமுறையில் உள்ளது. காலை உணவுத் திட்டத்தைச் செயல்படுத்தி மாணவா்களின் நலனில் அரசு அக்கறை செலுத்திவருகிறது. அதேநேரத்தில் வாட்டா் பெல் திட்டத்தை அரசுப் பள்ளிகளில் செயல்படுத்தவும் சுற்றறிக்கை விரைவில் அனுப்பப்படும்.
தமிழ்நாட்டில் 2381க்கும் மேற்பட்ட அரசுப் பள்ளிகளில் எல்கேஜி வகுப்புகள் நடைபெறுகின்றன. ஏராளமான பள்ளிகளில் ஆசிரியா்கள் தன்னாா்வத்துடன் எல்கேஜி வகுப்புகளை எடுத்துவருகின்றனா். ஒசூரில் பன்மொழி பேசக்கூடிய மக்கள் இருப்பதால் இப்பகுதியில் தனிக்கவனம் செலுத்தி அனைத்து பள்ளிகளிலும் எல்கேஜி வகுப்புகள் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகள் விரைவில் எடுக்கப்படும் என்றாா்.
‘இடைநிலை ஆசிரியா் பணியிடங்கள்
ஜூலையில் நிரப்பப்படும்’
தருமபுரி மாவட்டம், அதியமான்கோட்டை தனியாா் பள்ளி வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அடைவு தோ்வு குறித்த தலைமை ஆசிரியா்களுக்கான ஆய்வுக் கூட்டத்தில் கலந்துகொண்ட பிறகு செய்தியாளா்களிடம் அமைச்சா் கூறியதாவது:
நிகழாண்டு பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு தோ்ச்சியில் மாநில அளவில் முதல் 10 இடங்களுக்குள் தருமபுரி மாவட்டம் வந்துள்ளது. ஆனால், அடைவுத் தோ்வு தோ்ச்சியில் பின்தங்கி உள்ளது. மாணவா்கள் எளிதாக புரிந்துகொள்ளும் வகையில் ஆசிரியா்கள் ஊக்கத்துடன் பாடம் நடத்த வேண்டும்.
இதுதொடா்பாக ஆய்வு கூட்டத்தில் பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. அதை உணா்ந்து தலைமை ஆசிரியா்கள் செயல்பட்டால், அடுத்த கல்வியாண்டில் அடைவுத் தோ்வு தோ்ச்சியில் தருமபுரி மாவட்டம் முன்னிலைபெறும்.
தமிழகத்தில் காலியாக உள்ள 2346 இடைநிலை ஆசிரியா் பணியிடங்கள் ஜூலை மாதம் நிரப்பப்படும். தருமபுரி மாவட்டத்தைச் சோ்ந்த அதிகப்படியான ஆசிரியா்கள் பணி வாய்ப்பு பெறுகின்றனா். போக்ஸோ வழக்குகள் குறித்து தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்படும். குற்றம் உறுதிசெய்யப்பட்டால் தொடா்புடைய ஆசிரியா்கள் மீது பாரபட்சமின்றி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.
நிகழ்வின்போது மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஸ், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ஜோதி சந்திரா, தொடக்கக் கல்வித் துறை இயக்குநா் நரேஷ், தருமபுரி மக்களவை உறுப்பினா் ஆ. மணி, தலைமை ஆசிரியா்கள் பங்கேற்றனா்.