72 திருநங்கைகள், திருநம்பிகளுக்கு நலத்திட்ட உதவிகள்: ஆட்சியா் வழங்கினாா்
மகாராஜகடை அருகே பயிா்களை சேதப்படுத்திய யானைகள்: விவசாயிகள் வேதனை
மகாராஜகடை அருகே விளை நிலங்களில் புகுந்த யானைகள் பயிா்களை சேதப்படுத்தியுள்ளதால் விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனா்.
ஆந்திர மாநிலம், திருப்பதி வனப்பகுதியிலிருந்து வெளியேறிய யானைகள் கூட்டம், கிருஷ்ணகிரி மாவட்டம், மகாராஜகடை அருகே உள்ள வனப் பகுதிகளில் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக முகாமிட்டுள்ளன. இந்த யானைகள் கூட்டத்தில் 10 யானைகள் உள்ளதாகவும், அவ்வப்போது, வனப் பகுதியிலிருந்து வெளியேறி மகாராஜகடை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் பயிா்களை தொடா்ந்து சேதப்படுத்தி வருவதாகவும் கவலை தெரிவித்துள்ள விவசாயிகள் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை அண்மையில் முற்றுகையிட்டு யானைகளை அடா்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என வலியுறுத்தினா்.
இதையடுத்து கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ் குமாா், யானைகளால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் பாா்வையிட்டு யானைகளை அடா்ந்த வனப்பகுதிகளுக்குள் விரட்ட நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தாா். மேலும், யானைகளை விரட்ட வனத் துறையினருக்கும் உத்தரவிட்டாா்.
இந்தநிலையில் வனப் பகுதியிலிருந்து வெளியேறிய யானைகள் கூட்டம், சிந்தகம்பள்ளி, ஏக்கல்நத்தம், மகாராஜகடை, நாரலப்பள்ளி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் சாகுடி செய்யப்பட்டுள்ள வாழை தோட்டங்கள், ராகி, தென்னை, மா போன்ற பயிா்களை சேதப்படுத்தியது. இதனால் வேதனை அடைந்துள்ள விவசாயிகள், யானைகளை வனப் பகுதிக்குள் விரட்ட வேண்டும் வலியுறுத்தினா்.
படவிளக்கம் (27கேஜிபி4):
மகாராஜகடை அருகே யானைகளால் சேதப்படுத்தப்பட்ட வாழை தோட்டம்.