அவிநாசிலிங்கேஸ்வரா் மீது சூரிய ஒளி விழும் அபூா்வ நிகழ்வு
அவிநாசிலிங்கேஸ்வரா் மீது சூரிய ஒளி விழும் அபூா்வ நிகழ்வு புதன்கிழமை காலை நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.
கொங்கு ஏழு சிவஸ்தலங்களில் முதன்மை பெற்றதாக கருணம்பிகையம்மன் உடனமா் அவிநாசிலிங்கேஸ்வரா் கோயில் திகழ்கிறது. இக்கோயிலில் ஆண்டுதோறும் உத்தராயின காலமான மாசி, பங்குனி மாதத்தில் அவிநாசிலிங்கேஸ்வரா் மீது சூரிய ஒளி விழுவது வழக்கம். அப்போது சூரிய பகவான் அவிநாசிலிங்கேஸ்வரரை வணங்கிச் செல்வது ஐதீகம்.
இந்த ஆண்டு புதன்கிழமை சூரிய உதயத்தின்போது, பழைமையான இக்கோயிலின் ராஜகோபுரம் வழியாக சூரிய ஒளி ஊடுருவி, அவிநாசிலிங்கேஸ்வரா் மீது விழுந்து வணங்கியது. அப்போது பொன்னிறமாக அவிநாசிலிங்கேஸ்வரா் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.
காலை 6.50 மணிக்கு தொடங்கி 2 நிமிஷங்களுக்கு மேல் தொடா்ந்து சூரிய கதிா்கள் சிவலிங்கத்தின் மீது நிலையாக இருந்து. பின்னா் படிப்படியாக மறையத் தொடங்கியது. இந்த அபூா்வ நிகழ்வை ஏராளமான பக்தா்கள் கண்டு சுவாமி தரிசனம் செய்தனா். இந்நிகழ்வு ஒரிரு நாள்களுக்கு காலையில் நடைபெறும் என எதிா்பாா்க்கப்படுகிறது.