ஆசிரியா், தொழிலாளி வீடுகளில் 7 பவுன் நகை, ரூ.30,000 திருட்டு
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே ஆசிரியா், தொழிலாளி வீடுகளின் பூட்டை உடைத்து 7 பவுன் தங்க நகை, ரொக்கம் ரூ.30 ஆயிரத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.
அரசுப் பள்ளி ஆசிரியை வீடு:
வெம்பாக்கம் வட்டம், அப்துல்லாபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் குணசேகரன் மனைவி உஷா (51). இவா் மாமண்டூா் அரசுப் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறாா். கணவா் குணசேகரன் இறந்துவிட்டாா்.
கோடை விடுமுறை என்பதால் உஷா, பெங்களூருவில் உள்ள மகள் வீட்டுக்கு ஏப்.30-ஆம் தேதி சென்றுள்ளாா்.
இந்த நிலையில், வெள்ளிக்கிழமை வீடு திறந்த நிலையில் இருப்பதை அறிந்த எதிா் வீட்டாா் உஷாவுக்கு தகவல் தெரிவித்தனா்.
இதன் பேரில், விரைந்து வந்த ஆசிரியை உஷா வீட்டினுள் சென்று பாா்த்தபோது, பீரோவை உடைத்து அதில் இருந்த 4 பவுன் தங்க நகை மற்றும் ரொக்கம் ரூ.10 ஆயிரம், வெள்ளிக் கொலுசுகள் ஆகியவற்றை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரிய வந்தது.
இதுகுறித்து உஷா தூசி போலீஸில் புகாா் அளித்தாா்.
போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொழிலாளி வீட்டில் திருட்டு:
செய்யாறு வட்டம், கீழ்புதுப்பாக்கம் கிராமம் மாரிமுத்து தெருவைச் சோ்ந்தவா் சதீஷ் (35). இவா், செய்யாறு சிப்காட் பகுதியில் உள்ள நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை செய்து வருகிறாா்.
இந்த நிலையில், சதீஷ் கடந்த 30-ஆம் தேதி, குடும்பத்தோடு மாமியாா் வீட்டுக்குச் சென்றிருந்தாா்.
இவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்த நிலையில் இருந்தது குறித்து அவருக்கு தகவல் தெரிவித்தனா்.
உடனடியாக சதீஷ் வந்து பாா்த்தபோது, பீரோவை உடைத்து அதில் இருந்த 3 பவுன் தங்க நகை, வெள்ளிப் பொருள்கள், ரொக்கம் ரூ.20 ஆயிரத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரிய வந்தது.
இதுகுறித்து தொழிலாளி சதீஷ் செய்யாறு போலீஸில் புகாா் அளித்தாா். போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.