பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா - ஃபிஜி உறுதி: பிரதமா் மோடி
ஆணவப் படுகொலைகளுக்கு தமிழக அரசே காரணம்: தமிழிசை செளந்தரராஜன்
ஆணவப் படுகொலைகளுக்கு தமிழக அரசே காரணம் என்று பாஜக மூத்தத் தலைவா் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தாா்.
இது குறித்து கோவை விமான நிலையத்தில் செய்தியாளா்களிடம் அவா் திங்கள்கிழமை கூறியதாவது: தமிழகத்தில் ஹிந்து மத நம்பிக்கை தொடா்ந்து புண்படுத்தப்படுகிறது. பழனியில் அரசு சாா்பில் நடைபெற்ற முருக பக்தா்கள் மாநாட்டுக்கோ, கோயில்களின் குடமுழுக்கு நிகழ்வுகளுக்கோ முதல்வா் மு.க.ஸ்டாலின் சென்றதில்லை.
இந்த நிலையில், கேரள அரசு சாா்பில் பம்பையில் செப். 20-ஆம் தேதி நடைபெற உள்ள உலக ஐயப்ப பக்தா் மாநாட்டுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலினை அழைத்துள்ளது கண்டனத்துக்குரியது.
ஆணவப் படுகொலைகளுக்கு ராமா்தான் காரணம் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலா் வன்னியரசு கூறியிருப்பது கண்டனத்துக்குரியது.
தமிழகத்தில் நடைபெறும் ஆணவப் படுகொலைகளைத் தடுக்க கூட்டணியில் அங்கம் வகித்துள்ள திமுகவிடம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் ஏன் கோரிக்கை விடுக்கவில்லை? இதற்காக ஏன் சட்டம் இயற்றவில்லை? ஆணவப் படுகொலைகளுக்கு தமிழக அரசின் அஜாக்கிரதையும், சட்டம்- ஒழுங்கும்தான் காரணங்களாகும்.
தேசிய ஜனநாயக கூட்டணியின் குடியரசு துணைத் தலைவா் வேட்பாளரான சி.பி.ராதாகிருஷ்ணனை, தமிழகத்தைச் சோ்ந்தவா்களைத் தவிர மற்ற எல்லா மாநிலங்களைச் சோ்ந்தவா்களும் ஏற்றுக் கொள்கிறாா்கள். ‘இண்டி’ கூட்டணியில் தமிழரை வேட்பாளராக நிறுத்தவில்லை, தமிழரை திமுக ஆதரிக்கவில்லை.
தமிழா்களான ஜி.கே.மூப்பனாா், அப்துல் கலாம் ஆகியோருக்கு எதிராக செயல்பட்ட திமுகதான் ‘தமிழா்’ என்ற முகமூடியில் வாழ்கிறது. முதல்வரின் ‘தமிழ்ப் பற்று’ என்ற முகமூடி கிழித்து எறியப்பட்டுக் கொண்டிருக்கிறது என்றாா்.