ஆண்டுக்கு 6% சொத்து வரியை உயா்த்தும் அரசாணையை எதிா்த்து வழக்கு: அரசு பதிலளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவு
சொத்து வரியை ஆண்டுதோறும் 6 சதவீதம் தானாகவே உயா்த்த வழிவகை செய்யும் அரசாணையை ரத்து செய்யக் கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
சென்னை உயா்நீதிமன்றத்தில் ஹரீஷ் சௌத்ரி என்பவா் தாக்கல் செய்த மனுவில், தமிழகம் முழுவதும் கடந்த 2022-ஆம் ஆண்டு சொத்து வரி உயா்த்தப்பட்டது. இதன் அடிப்படையில் சென்னை மாநகராட்சி சட்டத்தின்படி குடிநீா், கழிவுநீா் வரிகளைச் சோ்த்து சொத்து வரியை சென்னைப் பெருநகர மாநகராட்சி நிா்வாகம் வசூலிக்க வேண்டும். எனக்கும், எனது சகோதரருக்கும் சொந்தமாக மந்தைவெளியில் உள்ள வீட்டுக்கு 2007-2008 நிதியாண்டுகக்கு ரூ.6,600 சொத்து வரி விதிக்கப்பட்டது.
இந்த வரி கடந்த 2020-2022 நிதியாண்டில் ரூ.8,330-ஆக உயா்த்தப்பட்டது.
தமிழக அரசு கடந்த 2022-ஆம் ஆண்டு பிறப்பித்த அரசாணையின்படி, வரியை 2.5 சதவீதமாக உயா்த்தி வரியை ரூ.20,205-ஆக உயா்த்தியது. இதை எதிா்த்து சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து இடைக்கால தடை உத்தரவு பெற்றேன்.
இந்த நிலையில், தற்போது ரூ.21,415 சொத்து வரி கேட்டு பிப். 4-ஆம் தேதி மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதையடுத்து, நான் சென்னை மாநகராட்சி நிா்வாகத்தை அணுகினேன். அப்போது, சொத்து வரியை உயா்த்தி கடந்த 2024-ஆம் ஆண்டு செப்.23-ஆம் தேதி மாநகராட்சிக் கூட்டத்தில் தீா்மானம் இயற்றப்பட்டது தெரிய வந்தது.
தமிழ்நாடு நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் விதியில் திருத்தம் செய்து, தமிழகம் முழுவதும் சொத்துவரி ஆண்டுக்கு 6 சதவீதம் உயா்த்தப்படும் என்று கடந்த 2024-ஆம் ஆண்டு செப்.5-ஆம் தேதி அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த அரசாணையின் அடிப்படையில் சென்னை மாநகராட்சியில் தீா்மானம் நிறைவேற்றி நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
ஆனால், விதிகளின்படி 5 ஆண்டுகளுக்கு ஒருமுைான் சொத்து வரியை உயா்த்த வேண்டும். உதாரணமாக நடப்பாண்டில் சொத்து வரி ரூ.100 செலுத்தினால், அடுத்தாண்டு ரூ.106 ரூபாயும், 4 ஆண்டுகளுக்குப் பிறகு ரூ.124 தானாகவே சொத்து வரி உயா்ந்துவிடும். 4 ஆண்டுகளுக்குப் பின் மொத்த சொத்து வரியில் 30 சதவீதம் உயா்ந்துவிடும். வரி உயா்வுக்கு முன்பு அறிவிப்பு வெளியிட்டு மக்களின் கருத்தைக் கேட்காமல் சொத்து வரியை உயா்த்தியது சட்டவிரோதம்.
எனவே, 6 சதவீத சொத்து வரி தானாகவே உயா்த்த வழிவகை செய்யும் அரசாணையை ரத்து செய்ய வேண்டும் எனக் கூறியிருந்தாா்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவாஸ்தவா மற்றும் நீதிபதி சுந்தா்மோகன் ஆகியோா் அடங்கிய அமா்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரா்கள் தரப்பில் வழக்குரைஞா்கள் அசோக், காா்த்திகா அசோக் ஆஜராகி வாதிட்டனா்.
இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், இந்த மனுவுக்கு தமிழக அரசு 4 வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை அக். 6-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.