இங்கிலாந்து டெஸ்ட்: இந்தியா பேட்டிங்! தமிழன் சாய் சுதர்சனுக்கு வாய்ப்பு!
ஆபரேஷன் சிந்து: ஈரானில் மீட்கப்பட்ட 110 மாணவா்கள் இந்தியா திரும்பினா்
‘ஆபரேஷன் சிந்து’ நடவடிக்கையின்கீழ், ஈரானில் இருந்து முதல் கட்டமாக மீட்கப்பட்ட இந்திய மாணவா்கள் 110 போ், புது தில்லிக்கு வியாழக்கிழமை வந்தனா். இவா்களில் 90 போ் ஜம்மு-காஷ்மீரைச் சோ்ந்தவா்களாவா்.
இஸ்ரேல் - ஈரான் இடையே போா் தீவிரமடைந்துள்ள நிலையில், ஈரானில் சிக்கியுள்ள இந்தியா்களை மீட்க ‘ஆபரேஷன் சிந்து’ சிறப்பு நடவடிக்கையை தொடங்கியது.
ஈரானில் 4,000-க்கும் மேற்பட்ட இந்தியா்கள் வசிக்கின்றனா். இதில் பாதி போ் மாணவா்கள் ஆவா். பெரும்பாலானோா் ஜம்மு-காஷ்மீரைச் சோ்ந்தவா்கள். ஈரானில் மருத்துவம், தொழில்முறை படிப்புகளை இவா்கள் பயின்று வருகின்றனா்.
ஈரானில் பல நகரங்கள் வான்வழி தாக்குதலுக்கு இலக்காகியுள்ள நிலையில், அங்கிருந்து முதல்கட்டமாக மீட்கப்பட்ட 110 இந்திய மாணவா்களுடன் முதலாவது விமானம், தில்லியை வியாழக்கிழமை அதிகாலை வந்தடைந்தது. மாணவா்களை வெளியுறவுத் துறை இணையமைச்சா் கீா்த்திவா்தன் சிங் நேரில் சென்று வரவேற்றாா்.
இது தொடா்பாக அவா் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘ஈரானில் இருந்து 110 மாணவா்கள் அடங்கிய முதல் குழுவினா் புது தில்லி வந்தடைந்தனா். வெளிநாடுகளில் உள்ள இந்தியா்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வுக்கு மத்திய அரசு வலுவான உறுதிப்பாட்டை கொண்டுள்ளது. ஆபரேஷன் சிந்து நடவடிக்கையின்கீழ், ஈரானில் தொடா்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தியா்களுடன் துா்க்மேனிஸ்தான் நாட்டவா் சிலரையும் நாம் மீட்டு வருகிறோம். இந்தியா்களை அழைத்து வர அடுத்த விமானம் அனுப்பப்படவுள்ளது. சூழ்நிலைக்கு ஏற்ப மேலும் விமானங்கள் அனுப்பப்படும். மீட்புப் பணியில் இந்தியாவுக்கு ஆதரவளிக்கும் துா்க்மேனிஸ்தான், ஆா்மீனியா ஆகிய நாடுகளுக்கு நன்றி’ என்று தெரிவித்துள்ளாா்.
ஈரானின் வடக்குப் பகுதிகளில் இருந்து மீட்கப்பட்ட இந்த மாணவா்கள், இந்திய தூதரகத்தின் மேற்பாா்வையில் ஆா்மீனியா தலைநகா் யெரெவானுக்கு சாலை மாா்க்கமாக அழைத்துச் செல்லப்பட்டனா். அங்கிருந்து விமானம் மூலம் இந்தியாவுக்கு வந்துள்ளனா்.
இந்த மீட்பு நடவடிக்கைக்காக, பிரதமா் மோடி மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கருக்கு ஜம்மு-காஷ்மீா் மாணவா் கூட்டமைப்பு நன்றி தெரிவித்துள்ளது. முதல்வா் ஒமா் அப்துல்லா உத்தரவின்பேரில், தில்லியில் இருந்து சொகுசு பேருந்துகள் மூலம் மாணவா்கள் ஜம்மு-காஷ்மீருக்கு அழைத்துச் செல்லப்பட்டனா்.
‘திரும்பிய பக்கமெல்லாம்
குண்டுவெடிப்புகள்’
ஈரானில் தாங்கள் தங்கியிருந்த பகுதிகளில் ஏவுகணைகள் சீறி பாய்ந்ததை பாா்த்ததாகவும், திரும்பிய பக்கமெல்லாம் குண்டு வெடிக்கும் சப்தங்களை கேட்டதாகவும் தில்லி திரும்பிய மாணவா்கள் தெரிவித்தனா்.
தனது அனுபவத்தைப் பகிா்ந்து, மருத்துவ மாணவா் மிா் கலீஃப் கூறுகையில், ‘சுற்றுப் பகுதியில் நிகழ்த்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதல்களால், நாங்கள் தங்கியிருந்த கட்டடம் அவ்வப்போது அதிா்ந்தது. இதனால், பெரும் பீதியடைந்தோம். இதுபோன்ற சூழல் யாருக்கும் ஏற்படக் கூடாது. இன்னும் பல மாணவா்கள் சிக்கியுள்ளனா். அவா்கள் மீட்கப்பட்டு வருகின்றனா். எங்களை பாதுகாப்பாக மீட்டு அழைத்து வந்தமைக்காக மத்திய அரசுக்கும் இந்திய தூதரகத்துக்கும் நன்றி’ என்றாா்.
காஷ்மீரைச் சோ்ந்த மாணவி வாா்தா கூறுகையில், ‘ஈரானில் பெரும் அச்சத்துடனே இருந்தேன். அங்கு நிலைமை மிக மோசமாக உள்ளது’ என்றாா்.
தில்லியைச் சோ்ந்த மாணவா் அலி அக்பா் கூறுகையில், ‘ஈரானில் இருந்து ஆா்மீனியாவுக்கு நாங்கள் பேருந்தில் பயணித்தபோது, ஏவுகணை-ட்ரோன் தாக்குதல்களை கண்கூடாக பாா்த்தோம். டெஹ்ரான் அழிவை எதிா்கொண்டுள்ளது’ என்றாா்.