ஆபரேஷன் சிந்தூர்: தில்லி விமான நிலையத்தில் 140 விமானங்கள் ரத்து!
பாகிஸ்தான் மீதான இந்தியாவின் தாக்குதல்களினால் தில்லி விமான நிலையத்தில் 140 விமானங்களின் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது.
தில்லி விமான நிலையத்துக்கு, சர்வதேச நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு விமானப் போக்குவரத்து நிறுவனங்கள் தங்களது விமானப் போக்குவரத்தை ரத்து செய்துள்ளன.
இதில், அங்கு வரவிருந்த 65 விமானங்கள் மற்றும் புறப்பட வேண்டிய 66 விமானங்களும் இன்று (மே 7) ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இத்துடன், அமெரிக்க விமானம் உள்ளிட்ட 4 வெளிநாட்டு விமானங்களின் போக்குவரத்தும் ரத்தாகியுள்ளது.
இதுகுறித்து தில்லி விமான நிலையத்தின் அதிகாரிகள் கூறியதாவது: ”வான்வழித் தடத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்களினால் சில விமானங்களின் போக்குவரத்து பாதிப்புக்குள்ளாகியுள்ளது. எனவே, பயணிகள் தங்களது விமான நிறுவனங்களைத் தொடர்புக் கொண்டு மாற்றுப் பயணத் திட்டங்கள் குறித்து தெரிந்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்” எனக் கூறியுள்ளனர்.
முன்னதாக, தில்லியிலுள்ள இந்திரா காந்தி பன்னாட்டு விமான நிலையத்தில் நாளொன்றுக்கு சுமார் 1,300 விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது.
பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் “ஆபரேஷன் சிந்தூர்’ எனும் பெயரில் இந்திய ராணுவம் அதிரடித் தாக்குதல்களை நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க:இந்தியாவில் மோசடியில் ஈடுபட்ட 23,000 முகநூல் பக்கங்கள் முடக்கம்!