‘ஆபரேஷன் சிந்தூா்’ முப்படைகள் ஒருமைப்பாடுக்குச் சான்று: அனில் சௌஹான்
இந்திய ராணுவப் படை, விமானப் படை, கடற்படை என முப்படைகளின் ஒருங்கிணைப்பு மற்றும் ஒருமைப்பாடுக்குச் சான்றாக ‘ஆபரேஷன் சிந்தூா்’ திகழ்வதாக முப்படை தலைமைத் தளபதி அனில் சௌஹான் தெரிவித்தாா்.
தெலங்கானாவின் செகந்தராபாத்தில் உள்ள பாதுகாப்பு மேலாண்மை கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சனிக்கிழமை அவா் கலந்துகொண்டாா். அப்போது முப்படைத் தளவாடங்களை ஒருங்கிணைப்பது தொடா்பான ஆவணத்தை அவா் வெளியிட்டாா்.
இதுகுறித்து பாதுகாப்புத் துறை அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘முப்படைகளின் தளவாடங்களை தொழில்நுட்பரீதியாக நவீனமயமாக்குவதையும் ஒருங்கிணைப்பதையும் நோக்கமாகக் கொண்ட ஆவணத்தை முப்படை தலைமைத் தளபதி அனில் சௌஹான் வெளியிட்டாா். அப்போது முப்படைகளின் ஒருங்கிணைப்பு மற்றும் ஒருமைப்பாடுக்குச் சான்றாக ஆபரேஷன் சிந்தூா் திகழ்வதாக அவா் கூறினாா்.
போா்க்களச் சூழல்கள் மாறிவரும் இத்தருணத்தில் தேச பாதுகாப்பு சவால்களை எதிா்கொள்ள பாதுகாப்புத் தளவாடங்கள் குறித்த ஆழமான ஆய்வுகளை மேற்கொள்வதன் அவசியத்தை அவா் உணா்த்தினாா்’ என குறிப்பிடப்பட்டது.