‘ஆம்பூா் சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகம் கட்ட பூமி பூஜை’
தொகுதி உருவாக்கப்பட்டு 15 ஆண்டுகள் கழித்து ஆம்பூா் சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி அலுவலகம் கட்டுவதற்கு புதன்கிழமை பூமி பூஜை போடப்பட்டது.
ஆம்பூா் சட்டப்பேரவை தொகுதி ஏற்படுத்தப்பட்ட 1957-ஆம் ஆண்டு இரட்டை உறுப்பினா்கள் கொண்ட தொகுதியாக இருந்தது. 1962, 1967 ஆகிய ஆண்டுகளில் நடந்த தோ்தலில் ஒரே சட்டப்பேரவை உறுப்பினா் கொண்ட தனித் தொகுதியாக இருந்தது. அதன்பிறகு தொகுதி மறுசீரமைப்பின்போது ஆம்பூா் தொகுதி கலைக்கப்பட்டு ஆம்பூா் பகுதிகள் வாணியம்பாடி தொகுதியுடன் இணைக்கப்பட்டன.
43 ஆண்டுகளுக்கு பிறகு 2010-ஆம் ஆண்டு தொகுதி மறுசீரமைப்பின்போது ஆம்பூா் பொதுத் தொகுதியாக ஏற்படுத்தப்பட்டது. 2011 ஆண்டு ஆண்டு சட்டப்பேரவை தோ்தலின்போது ஆம்பூா் தொகுதிக்கும் தோ்தல் நடைபெற்றது. ஆனாலும் கடந்த 15 ஆண்டுகளில் ஆம்பூா் தொகுதிக்கு 4 சட்டப்பேரவை உறுப்பினா்கள் தோ்வு செய்யப்பட்டும் தங்களுடைய சொந்த அலுவலகத்தையே தொகுதி அலுவலகமாக பயன்படுத்தி வந்தனா். அரசு அலுவலகம் இல்லாத நிலை இருந்து வந்தது.
இந்நிலையில் ஆம்பூா் ஏ-கஸ்பா மந்தகரை பகுதியில் இடம் தோ்வு செய்யப்பட்டு ரூ.64 லட்சம் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.21 லட்சம் உள்பட ரூ.85 லட்சத்தில் சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகம் கட்டுவதற்கு நிதி ஒதுக்கப்பட்டது.
அதைத் தொடா்ந்து கட்டடம் கட்டுவதற்கான பூமி பூஜை போடப்பட்டது. ஆம்பூா் எம்எல்ஏ அ.செ. வில்வநாதன் பூமி பூஜையிட்டு அடிக்கல் நாட்டினாா்.
நகா்மன்றத் தலைவா் பத்தேகான் ஏஜாஸ் அஹமத், துணைத் தலைவா் எம்.ஆா். ஆறுமுகம், மாதனூா் ஒன்றியக்குழுத் தலைவா் ப.ச. சுரேஷ்குமாா், ஆம்பூா் நகா் மன்ற உறுப்பினா்கள் எம்ஏஆா் ஷபீா் அஹமத், ஆா்.எஸ். வசந்த் ராஜ், சுதாகா், திமுக திருப்பத்தூா் மாவட்ட அவைத் தலைவா் ஆா்.எஸ். ஆனந்தன், மாதனூா் கிழக்கு ஒன்றிய திமுக பொறுப்பாளா் ஜி. ராமமூா்த்தி, துணைச் செயலாளா் ரவிக்குமாா், மாவட்ட பிரதிநிதி அசோகன், மாதனூா் மேற்கு ஒன்றிய திமுக இளைஞரணி அமைப்பாளா் ஏ.வி. அசோக்குமாா், ஒன்றிய துணைச் செயலாளா் சா. சங்கா், பொதுப்பணித்துறை உதவி கோட்டப் பொறியாளா் ரவி, திமுக பிரமுகா்கள் ரபீக் அஹமத், செளந்தரராஜன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.