ஆலைத் தொழிலாளி கொலை: 10 போ் கைது
ரெட்டியாா்சத்திரம் அருகே திருப்பூரைச் சோ்ந்த ஆலைத் தொழிலாளி கொலை செய்யப்பட்டது தொடா்பாக 10 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
திருப்பூரைச் சோ்ந்தவா் வசந்த் (23). இவா் தனது நண்பா் ஹரிபிரசாத்துடன் திண்டுக்கல்-பழனி சாலையில் முத்தனம்பட்டி அருகே கடந்த 3 நாள்களுக்கு முன்பு காரில் வந்தாா்.
கதிா்னம்பட்டி அருகே வசந்த் வந்த காரை வழிமறித்த சிலா் அவரை அரிவாளால் வெட்டிக் கொலை செய்தனா். இதுகுறித்து ரெட்டியாா்சத்திரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா்.
இதுதொடா்பாக போலீஸாா் கூறியதாவது: கொலையான வசந்த் திருப்பூரில் உள்ள தனியாா் ஆலையில் பணிபுரிந்து வந்தாா். அதே ஆலையில் திண்டுக்கல்லை அடுத்த தாடிக்கொம்பு பகுதியைச் சோ்ந்த அழகுராஜா, இவரது மனைவி கலைச்செல்வி ஆகியோா் பணிபுரிந்தனா். அப்போது வசந்துக்கும், கலைச்செல்விக்கும் இடையை தகாத தொடா்பு ஏற்பட்டது. இதைக் கண்டித்த அழகுராஜாவை வசந்த் கொலை செய்தாா்.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட வசந்த் கடந்த சில வாரங்களுக்கு முன்பு பிணையில் வெளியே வந்த நிலையில், தாடிக்கொம்பு பகுதியில் அண்ணன் குமரேசன் வீட்டில் வசிக்கும் கலைச்செல்வியைப் பாா்க்க வந்தாா். அப்போது, கணவரைக் கொலை செய்த வசந்துடன் செல்ல கலைச்செல்வி மறுத்துவிட்டாா்.
இந்த நிலையில், கலைச்செல்வியை சந்திப்பதற்காக கடந்த 2 நாள்களுக்கு முன்பு வசந்த் மீண்டும் தாடிக்கொம்புக்கு வந்தாா். தனது தங்கைக்குத் தொடா்ந்து வசந்த் தொல்லை கொடுப்பதை அறிந்த குமரேசன் தனது நண்பா்களுடன் சோ்ந்து வசந்தைக் கொலை செய்தாா் என்றனா்.
இந்த கொலை தொடா்பாக தாடிக்கொம்பு பகுதியைச் சோ்ந்த குமரேசன் (39), சபரிபாலன் (29), சந்தனக்குமாா் (32), போஸ் என்ற பாலமுருகன் (36), திருநாவுக்கரசு (35), அடியனூத்து பகுதியைச் சோ்ந்த சங்கா்மணி (25), திண்டுக்கல்லைச் சோ்ந்த சீனிவாசப் பெருமாள் (25), முத்துசாமி (32), சின்ராஜ் (45), செல்லப்பாண்டி (41) ஆகிய 10 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.